விருதுநகர் ரோசல்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 118இல் வாக்குப்பதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை எந்த ஒரு பிரச்னையும் இன்றி சுமூகமாக நடைபெற்றது. ஆனால், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் திமுகவினர் வாக்குபதிவை முடிக்க விடாமல் காலதாமதப்படுத்தியதாகக் கூறி அங்கு வாசலில் இருந்த பாஜக, அதிமுகவினர் பணியில் ஈடுபட்ட அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சீல் வைக்க விடாமல் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினர் நேரில் சென்று சமரசம் செய்தனர். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை காவல் ஆய்வாளர் மாடசாமி தாக்கும் முறையில் தள்ளி விட்டு தகாத வார்தையால் திட்டினார். பின்பு விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அதன் பின்னர் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சீல்வைத்து தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.