குடும்பத் தகராறு: 2 பிள்ளைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

author img

By

Published : Nov 29, 2021, 11:25 AM IST

தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

விருதுநகர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்ட பெண் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (31). இவருக்கும் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சிவக்குமார் - லட்சுமி பிரியா தம்பதியினரின் மகள் தர்ஷினி (9), குழந்தை சிவ சண்முகவேல் (5). சிவக்குமார் வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பால்பண்ணையில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்த நிலையில் சிவக்குமார் ஒரு பெண்ணுடனும், லட்சுமி பிரியா வேறு ஒருவருடனும் அடிக்கடி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை (நவம்பர் 28) கணவன் மனைவிக்கும் இடையே வழக்கம்போல் சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா பிள்ளைகளுடன் ஆடு மேய்க்கச் சென்றபோது, இரண்டு பிள்ளைகளுக்கும் எறும்பு மருந்தைக் கொடுத்து தம்மநாயக்கன்பட்டியில் உள்ள செல்வராஜ் என்பவரின் கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதோடு தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து வெகு நேரம் ஆகியும் தன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் காணவில்லை என்று சிவக்குமார் ஆடு மேய்க்கும் பகுதிக்குச் சென்று பார்த்தபோது கிணற்றில் மூவரும் இறந்து மிதந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்துவந்த வச்சக்காரப்பட்டி காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மூவரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இரண்டு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதோடு பெண் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை: நளினி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்யக்கோரும் அரசு - இன்று விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.