விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாகலிங்க நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டில், பீரோ உள்ளிட்ட மர பர்னிச்சர்கள் செய்யும் தச்சுப்பட்டறை இயங்கிவருகிறது.
பூட்டியிருந்த இந்த தச்சுப்பட்டறையின் கூரை வழியாக இன்று (ஜூன். 23) திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அங்கு சென்றபோது தச்சுப் பட்டறையின் உள்ளே தீ மளமளவென பிடித்து பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயணைப்புத் துறைக்கும் நகர காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் தச்சுப் பட்டறையில் இருந்த தேக்கினால் செய்யப்பட்ட கட்டில், பீரோ உள்ளிட்ட சுமார் ரூ. 4 லட்ச ரூபாய் மதிப்புடைய மர பர்னிச்சர்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகிலிருந்த விசைத்தறி கூடம் தீ விபத்தில் இருந்து தப்பியது, தச்சுப் பட்டறையில் ஆட்கள் இல்லாதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: திருவண்ணாமலை காவல் துணை ஆய்வாளர் வீட்டில் பெண் தீ வைப்பு!