ETV Bharat / state

தனிப்படைகள் 6 ஆக அதிகரிப்பு; ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் விடுவிப்பு

author img

By

Published : Dec 18, 2021, 5:35 PM IST

6 SPECIAL SQUAD FORMED FOR SEARCHING EX MINISTER KT RAJENDRA BALAJI, ராஜேந்திர பாலாஜியை தேட ஆறு தனிப்படை அமைப்பு
6 SPECIAL SQUAD FORMED FOR SEARCHING EX MINISTER KT RAJENDRA BALAJI

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியைத் தேடி ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவரின் உறவினர்கள் உள்பட மூவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 12 மணிநேர தீவிர விசாரணைக்கு பிறகு எந்த வழக்குப்பதிவும் இன்றி மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ. 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

மனு தள்ளுபடி

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ. 1.06 கோடி பெற்றதாக கூறி கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரியும் இந்த வழக்கில் முன் பிணை கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆறு தனிப்படை அமைப்பு

ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 17) தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மோசடி புகார் வழக்கில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், இரண்டு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆறு தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய திருச்சி, சென்னை, பெங்களூரு பகுதிகளுக்கு தனிப்படை காவலர்கள் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஒட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 மணிநேரத்திற்கு பின் விடுவிப்பு

மேலும், தொடர் விசாரணைக்காக மூன்று பேரையும் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சுமார் 12 மணிநேர விசாரனைக்குப் பின் வழக்குப்பதிவு ஏதுமின்றி மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடம் குறித்து ஆறு தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், இதுவரை எந்த தகவலும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.