ETV Bharat / state

போக்சோ நீதிமன்றத்தில் 178 வழக்குகள் விசாரணை!

author img

By

Published : Oct 10, 2020, 4:34 PM IST

விருதுநகர்: மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் 178 வழக்குகள் விசாரணையில் உள்ளதாக  நீதிபதி பரிமளா தெரிவித்தார்.

போக்சோ
போக்சோ

விருதுநகர் மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கான நீதி குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு விருதுநகர் தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தார்.

பெண்கள், குழந்தைளுக்கு எதிரான குற்றப்பிரிவு கண்காணிப்பாளரும், போக்சோ சட்ட நோடல் அலுவலருமன கயல்விழி, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிமளா, கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், கூடுதல் கண்காணிப்பாளர் கூத்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பேசுகையில், 18 வயது பூர்த்தி ஆகாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் வகைகள் அவற்றுக்கான தண்டனைகள் குறித்து விளக்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதுகாப்பு, குற்றத்தில் ஈடுபட்டோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை கையாள்வது குறித்தும் விளக்கினார்.

இவரைத் தொடர்ந்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிமளா பேசுகையில், "போக்சோ சட்டப் பிரிவு பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; 18 வயது பூர்த்தி ஆகாத ஆண், பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது அதை காவல் உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் உள்ள அலுவலர்களே விசாரிக்க வேண்டும்.

வழக்குப் பதிவு செய்யும்போது குற்றத்திற்கான பிரிவை மட்டும் சேர்க்காமல் தண்டனைக்கு உரிய பிரிவையும் சேர்க்க வேண்டும். விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் 178 வழக்குகள் விசாரணையில் உள்ளன" என்றார்.

நிகழ்ச்சியில், போக்சோ வழக்குப் பதிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை விதிகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பாகம் வெளியிட்டுள்ள கையேட்டை நீதிபதி பரிமளா, காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.