ETV Bharat / state

விருதுநகரில் ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல் கண்டெடுப்பு.

author img

By

Published : Jun 8, 2023, 10:56 AM IST

விருதுநகரில் ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல் விருதுநகரில் கண்டெடுப்பு
விருதுநகரில் ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல் விருதுநகரில் கண்டெடுப்பு

விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால (VIRUDUPATI)மைல்கல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளது.

விருதுநகரில் ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல் விருதுநகரில் கண்டெடுப்பு

விருதுநகர்: தமிழ் எண் பொறிக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல் கல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தி விநாயகபுரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மைல்கல் முத்து முனியசாமியாக வழிபாட்டில் இருப்பதை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டறிந்து உள்ளனர். இது குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, "ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல்கற்களில் ஊர் பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழிலும், தூரத்தை ரோமன் மற்றும் தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மைல்கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டு உள்ள மைல்கல்லில் VIRUDUPATI என ஆங்கிலத்திலும், விருதுபட்டி என தமிழிலும் எழுதப்பட்டு உள்ளது. இங்கிருந்து விருதுநகர் ரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், ‘௧’ என்ற தமிழ் எண்ணிலும் மைல்கல்லில் குறித்து உள்ளனர். இந்த கல்லில் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளதால் இதன் எழுத்துகள் தெளிவாக இல்லை. இந்த கல் வழிபாட்டில் உள்ளதால் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அடுத்து 1915 இல் நகராட்சியான விருதுநகர், 1923 க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, 1876 இல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது.

இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுப்பட்டியைக் குறிக்கும் VPT தான். அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருதுபட்டி ரயில் நிலையத்திற்கு வந்து பின் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக்கோட்டையிலிருந்து சரளைக்கல் சாலை அமைக்கப்பட்டபோது, இந்த மைல்கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும். மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி என பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம்.

இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் ‘விருதுகள் வெட்டி’ என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869 இல் வெளியிடப்பட்ட நூலில் விருதுப்பட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி 1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்” என வே. ராஜகுரு கூறி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.