ETV Bharat / state

மதுபோதையில் தகராறு: 2 மாதத்திற்குப் பின் ஏரியில் இளைஞரின் சடலம் மீட்பு - என்ன நடந்தது?

author img

By

Published : Dec 20, 2022, 11:01 PM IST

Etv Bharat
Etv Bharat

முன் விரோதத்தில் அடித்துக்கொலை செய்து ஏரியில் புதைக்கப்பட்ட விக்கிரவாண்டி இளைஞரின் உடல் இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில், தோண்டி எடுக்கப்பட்டது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வெங்கடேஸ்வரா வீதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கவியரசன்(26). இவர் கடந்த அக்.6ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், தந்தை கலியமூர்த்தி மாயமான தன் மகனை கண்டுபிடித்து தரக்கோரி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அக்.6-ல் காணாமல்போன இளைஞர்: இந்தப் புகாரின் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கவியரசனை அவருடைய நண்பரான ஆவுடையார்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராம்குமார்(20) என்பவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அடித்துக் கொலை செய்து, தனது நண்பர்கள் 7 பேர் உதவியுடன் ஆவுடையார்பட்டு ஏரியில் புதைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 17ஆம் தேதி முதல் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளார் விநாயகமுருகன், சார்பு ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கவியரசனின் உடலை ஏரியில் 11 அடி ஆழ தண்ணீரில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஏரியில் சடலம் மீட்பு: இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு உடலானது புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று (டிச.19) பிற்பகல் 12 மணியளவில் விக்கிரவாண்டி தனி தாசில்தார் ஜோதிவேல் முன்னிலையில் தடயவியல் துணை இயக்குநர் சண்முகம் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஏரியில் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு படகில் சென்று கவியரசனின் உடலை தோண்டி மீட்டனர்.

உடலானது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை, அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் கவியரசனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மது போதையில் நண்பனை அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய சக நண்பன் கைது
மது போதையில் நண்பனை அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய சக நண்பன் கைது

4 பேர் கைது: மேலும், இவ்வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு, ராம்குமார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த ராம்குமார், மற்றும் அவனது நண்பர்களான அன்புமணி(27), சஞ்சய்(19), 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் வெளியூர் தப்பி செல்வதற்காக விக்கிரவாண்டி மேலக்கொந்தை சாலைப்பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்தவர் வாக்குமூலம்: 'கடந்த அக்.3 ஆம் தேதி நானும், நண்பர் கவியரசனும் டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நான் கவியரசனை கொல்ல திட்டமிட்டு, அவரை ஆவுடையார்பட்டுக்கு வர வைத்தேன். பின்னர், இருவரும் மது அருந்தினோம்.

அப்போது நான் மதுபோதையில் கவியரசனை அடித்துக்கொலை செய்து, எனது நண்பர்கள் உதவியுடன் ஏரியில் புதைத்தேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்துவிட்டனர்' என கைது செய்யப்பட்ட ராம்குமார் வாக்குமூலம் அளித்தார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பயங்கரவாத செயல்களுக்கு PFI ஆள் திரட்டியதாக குற்றச்சாட்டு - NIA அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.