ETV Bharat / state

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 1:49 PM IST

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

ED Summons to Minister Ponmudi: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

விழுப்புரம்: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012இல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஜூலை மாதம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது. சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அதேபோல், அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை அடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக வரும் நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் இல்லாத அமைப்பு அரசின் சின்னங்களைப் பயன்படுத்துவது அபாயகரமானது - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.