ETV Bharat / state

மரணத்தில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் 3 மாதத்திற்குப் பிறகு தோண்டியெடுத்து உடற்கூராய்வு!

author img

By

Published : Dec 19, 2020, 10:18 AM IST

dead
dead

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மூன்று மாதத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் தனது மகள் சந்தியாவை பள்ளியில் சேர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

விபத்து

திண்டிவனம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கடக்க முயன்றபோது திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் (புல்லட்) மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அவரது தலை, இடுப்புப் பகுதியில் அடிபட்டுள்ளது.

தங்கமணியின் உடலில் வெளிப்புறமாக பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டும் வீட்டிற்கு அன்றைய தினமே சென்றுள்ளார்.

மரணத்தில் சந்தேகம்

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதியன்று தங்கமணி உடல் நலப் பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

தற்போது அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்து சார் ஆட்சியரிடம் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனைப் பரிசீலனை செய்த சார் ஆட்சியர் உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டார்.

3 மாதங்களுக்குப் பிறகு உடற்கூராய்வு

அதன்படி நேற்று (டிச. 18) தங்கமணியின் உடலை வட்டாட்சியர் செல்வம், காவல் துறையினர் கண்காணிப்புடன் மருத்துவர்கள் மதுவர்தனா, வடிவேல் அடங்கிய குழுவினர் உடற்கூராய்வு மேற்கொண்டனர். உடற்கூராய்வு முடிவுக்குப் பின்னரே மரணத்தில் நிலவி உள்ள சந்தேகம் விலகும் எனக் குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.