விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையின் மேல்தெருவில் உள்ள மருந்துக்கடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்திரி தள்ளுவண்டியில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் டிசம்பர் 15ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்து கிடந்தான். இதனை கண்ட பொதுமக்கள் விழுப்புரம் மேற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்தனர்.
உயிரிழந்த சிறுவன் நீலநிற டி-சர்ட்டும், வெள்ளை மற்றும் சிகப்பு நிற கட்டம்போட்ட டிரவுசரும் அணிந்திருந்தான் என்பதை தவிர வேறு எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கை மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
அதில் சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் இரண்டு நாட்களாக உணவு, நீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் பசியால் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை; தேடுதல் வேட்டையில் காவலர்கள்