விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி மற்றும் கவின் நிலவு ஆகிய சகோதரிகள் சிகிச்சைக்காக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ் சாலையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவிநிலவு (வயது 7) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஈஸ்வரி (வயது 19) விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் உட்கோட்ட காவல்துறை அதிகாரி பார்த்திபன் ஆகிய இருவரும் நேரில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையும் படிங்க: ஆந்திராவில் சோகம் - ஆட்டோ மீது மின்கம்பி விழுந்ததில் 5 பேர் உடல் கருகி பலி