ETV Bharat / state

வேலூரின் பாரம்பரியமான இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!

author img

By

Published : Feb 26, 2023, 1:47 PM IST

Updated : Feb 26, 2023, 5:15 PM IST

Etv Bharat
Etv Bharat

வேலூரின் பாரம்பரியமான "இலவம்பாடி முள் கத்தரிக்காய்"க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூரின் பாரம்பரியமான இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!

வேலூர்: பாரம்பரியமான "இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு" புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முள் கத்தரிக்காயின் தனித்துவம் மற்றும் புவியியல் பண்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இலவம்பாடி முள் கத்தரிக்காயைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த ரகத்தைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் விவசாயி ரமேஷிடம் பேசியபோது, "இலவம்பாடிங்கறது ஒரு சின்ன கிராமம். ஆனால், எங்க ஊர் முள்கத்தரிக்காயால, கிராமத்தோட பேரு நாடு முழுக்கப் பிரபலமாயிடுச்சு. பல தலைமுறைகளாக எங்க ஊர் விவசாயிங்க இதைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு வந்தாங்க.

பிறகு, மற்ற கிராமங்கள்லேயும் இது அதிக அளவுல சாகுபடி செய்யப்பட்டுச்சு. இன்னும் சொல்லப்போனால், முன்னாடியெல்லாம் இந்த பகுதியில கத்தரிச் சாகுபடினு சொன்னாலே அது இலவம்பாடி முள் கத்தரிக்காயாதான் இருக்கும். கல்யாணமாகிப் போன பொண்ணு, மாப்பிள்ளையோடு தாய் வீட்டுக்கு வந்துட்டு போறப்ப, கூடை நிறையக் கத்தரிக்காயைக் கொடுத்து அனுப்புவதை வேலூர் மக்கள் வழக்கமாகவே வச்சிருந்தாங்க'' என பெருமையாக கூறினார்.

இவ்வாறு நம்பிக்கையோடு தொடர்ந்த அவர், 'வெளியூர்வாசிகளும் கூட வேலூர் வரும் போதெல்லாம், இலவம்பாடி முள்கத்தரிக்காயை ஆசையாக கேட்டு வாங்கிக்கிட்டுப் போவாங்க. இதனால், சந்தைகளில் வியாபாரிகள், எப்பவுமே இதைக் குவிச்சு வைச்சிருப்பாங்க. ஆனால், காலப்போக்குல விவசாயிகள் இதைச் சாகுபடி செய்வதை படிப்படியா கைவிட்டதுனால, சந்தைகளில் இது கிடைக்குறதே அரிதாயிடுச்சு. வீரிய ரகக் கத்தரிக்காய்க்கு மக்கள்கிட்ட மவுசு அதிகரிச்சதுனால, இலவம்பாடி முள்கத்தரிக்காய்க்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை

அதுமட்டும் இல்லாமல், இந்தச் செடிகளில் முள் இருக்குறதுனால, பரமாரிப்புப் பணிகள் செய்றப்ப, கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தாகணும். செடிகளில் காய்கள் நல்ல உறுதியான பிடிப்புத்தன்மையோடு இருக்குறதுனால, இதைக் கொஞ்சம் சிரமப்பட்டுதான் பறிச்சாகணும். இதைப் பறிக்க வேலையாள்கள் கிடைக்குறதும் தட்டுப்பாடா ஆயிடுச்சு' என வருத்தத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ’இதுமாதிரியான காரணங்களால வேலூர் பகுதி விவசாயிங்க, முள் இல்லாத மற்ற ரகக் கத்தரிக்காய்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சாட்டங்க. ஆனா, எது எப்படியோ! இதுக்கு என்ன வேணும்னாலும் காரணம் சொல்லலாம். ஆனா, வேலூர் மாவட்டத்தோட பாரம்பரிய அடையாளமா இருந்துகிட்டு இருக்கிற இந்த கத்தரிக்காய் பெருமளவு கைவிடப்பட்டது என்பது எங்களோட மண்ணுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.

இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு!
இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!

இது சுண்ணாம்புச் சத்து நிறைஞ்ச பூமி. எங்க மண்ணுக்குனு இருந்த தனித்துவமான வளத்துனாலதான், இங்க சாகுபடி செஞ்ச இலவம்பாடி முள்கத்தரிக்காய் தனி ருசியோடு இருந்திருக்கு. அப்பெல்லாம் இந்தப் பகுதி விவசாயிங்க ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியெல்லாம் பயன்படுத்த மாட்டாங்க. விதைப்புக்கு முன்னால வெள்ளாடுகளை நிலத்துல மேய்ச்சலுக்கு விட்டு, மாடுகளை ஏர் பூட்டி, உழவு ஓட்டி, இலவம்பாடி முள் கத்தரி விதையை விதைப்பு செய்வாங்க. செடிகள் வளரத் தொடங்கிய பிறகு, பன்றி சாணத்துல நெருப்பு மூட்டி, புகை போடுறதையும் வழக்கமாக வச்சிருந்திருக்காங்க. இதனால் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டது.

மற்ற ரக முள் கத்தரிக்காய்களுக்கும், இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கும் உள்ள வேறுபாட்டையும் ரொம்ப எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இலவம்பாடி ரக கத்தரிச்செடியில் அனைத்து பாகத்திலும் முள் இருக்கும். இலையோட மேல் பகுதி, அடிப்பகுதி, அடித்தண்டு, காயின் காம்புப் பகுதினு எல்லாத்துலயும் முள் இருக்கும். மற்ற ரக முள் கத்தரிச்செடிகள்ல பெரும்பாலும் இலையோட மேல் பகுதியில மட்டும் தான் முள் இருக்கும்.

இலவம்பாடி கத்தரி பிஞ்சாக இருக்கும்போது அடர் ஊதா நிறத்தில் இருக்கும். காய்களாக முதிர்ச்சி அடைந்து விற்பனைக்கு வரும் போது, வெளிர் ஊதா நிறத்துக்கு மாறிடும். காய்களோட தோல் பகுதி நல்ல தடிப்பா இருக்கும். இவையெல்லாம் தான் இலவம்பாடி முள்கத்தரியோட தனித்தன்மை.

இந்த கத்தரிக்காயை கத்தியால் நாலைந்து கோடுகளைக் கீறி, இரும்புச் சட்டியில போட்டு எண்ணெய் கத்திரக்காயாக வதக்கு வாங்க பாருங்க. அப்பவே நாக்குல எச்சில் ஊறும். எண்ணெய்க் கத்திரக்காய்னு சொன்னாலே, அது இலவம்பாடி கத்திரக்காய்தான். அந்த காலத்துல, ஆமணக்கு விதைகளோட மேல் தோலை நீக்கிட்டு, அது உள்ளார இருக்குற வெள்ளைப் பகுதியை நசுக்கி, இரும்பு கரன்டியில போட்டு அடுப்புல காட்டுவாங்க. அதுல கொஞ்சம் தண்ணீர் ஊத்தி கொதிக்க வெச்ச உடனே எண்ணெய் வரும்.

அந்த எண்ணெயில உப்பு, மிளகாய்த் தூள் எல்லாம் போட்டு, அதுல இலவம்பாடி கத்தரிக்காயை வதக்கி சாப்பிடுவாங்க. அது செம ருசியா இருக்கும். சாம்பார், கூட்டு, பொரியலுக்கும் இந்தக் கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். முன்னாடியெல்லாம் இந்த பகுதியில் வீட்டு விசேஷங்கள், படையல்களிலும் இந்தக் கத்திரக்காய் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் இடம்பெறும். ஆனால் இப்பெல்லாம் அப்படியில்ல. இதைப் பயன்படுத்துறதும் அரிதாயிடுச்சு. விவசாயிங்க இதை பயிர் பண்றதும் அரிதாயிடுச்சு. இது நம்ம ஊரோட பாரம்பரியம் இதைக் கைவிட்டுடக் கூடாதுனு ஒரு சில விவசாயிங்க, ஆர்வமா இதைப் பயிர் பண்ணிகிட்டு இருக்காங்க" என உற்சாகமாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி, முதலமைச்சர், நம்மாழ்வார்...விரும்பிய இலவம்பாடி கத்திரி!
ஜனாதிபதி, முதலமைச்சர், நம்மாழ்வார்...விரும்பிய இலவம்பாடி கத்தரி!

ஜனாதிபதி, முதலமைச்சர், நம்மாழ்வார்...விரும்பிய இலவம்பாடி கத்தரி! "இந்திய ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் ஒருமுறை வேலூருக்கு வந்தார். அப்ப அவருக்கு வழங்கப்பட்ட உணவில், இலவம்பாடி முள்கத்தரிக்காயை எண்ணெயில் வதக்கி காரசாரமா கொடுத்திருத்தாங்க. அதைச் சாப்பிட்டுப் பார்த்து அசந்துப்போயிட்டாராம். அவர் டெல்லி போன பிறகும் இலவம்பாடி முள்கத்தரிக்காய் ருசி பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாராம்.

மேலும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார். இங்க இருந்து அமைச்சர் துரைமுருகன்தான் கருணாநிதிக்கு அனுப்பி வைப்பார். ஒருமுறை கருணாநிதி உழவர் சந்தைக்கு வந்த போது, அவரே நேரடியாக விவசாயிகிட்ட கேட்டு விலைக்கு வாங்கிக்கிட்டு போனாரு.

அதைத் தொடர்ந்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வேலூர் பக்கம் வந்தாலும், இலவலம்பாடி கத்திரக்காய் குழம்பு வேணும்ய்யானு விரும்பி சாப்பிடுவார். வாய்ப்பு கிடைக்கும் போதும், இலவம்பாடி கத்தரி பத்தி சுவையாகவும் பேசுவார். இப்போது பல விவசாயிங்க, இதை சாகுபடி செய்யத் தொடங்கிட்டாங்க" என்றார், விவசாயி ரமேஷ்.

இலவம்பாடி கத்தரிக்கு பெயர் பெற்ற கிராமங்கள்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல தலைமுறைகளாக இலவம்பாடி கத்தரி சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது சில விவசாயிகள் மட்டும் குறைந்த பரப்பில் இதைத் தொடர்கிறார்கள். இந்நிலையில், இலவம்பாடி கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதை பெருமகிழ்ச்சியாக வேலூர் விவசாயிகள் கருதுகிறார்கள்.

Last Updated :Feb 26, 2023, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.