ETV Bharat / state

வேலூர் விமான நிலையத்தில் விரைவில் சிறிய விமானங்கள் இயக்கம் - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 7:36 AM IST

Minister V.K Singh : வேலூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

Minister V.K Singh
மத்திய அமைச்சர் வி.கே சிங்

வேலூர்: கேவி குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூரில், நேற்று மாலை 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு, 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் வி.கே.சிங் திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி உள்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது, “சாதி மத காரணங்களால் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு தடைபடக்கூடாது என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். அதற்கான முயற்சிகளை பிரதமர் எடுத்து வருகிறார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த சமுதாயத்திற்கு இனிவரும் காலங்களில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்த உள்ளார். தமிழ்நாட்டில் 37 லட்சம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 11.4 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு பயனாளி இருந்தால், அந்தக் குடும்பத்திற்கு இலவச எரிவாயு இணைப்பு, இலவச குடிநீர், இணைப்பு மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்கள் கிடைக்கும்.

இது போன்ற திட்டங்களைத்தான் பிரதமர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு என பிரதமர் திட்டங்களை தீட்டி, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறார். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "நாட்டில் வறுமையை அகற்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்த விழிப்புணர்வு, வாகனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூரில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானங்கள் இயக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் விமானங்கள் இயக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தேவையான மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.