வேலூர்: கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. நாட்டில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விரைவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி
அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 97 கோடி டோஸ்க்கு மேல் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 100 கோடி டோஸ் எட்டி சாதனை படைக்கவுள்ளது.
இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள 100 புராதன நினைவு சின்னங்களை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்க ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து நினைவு சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டதில் வேலூர் கோட்டையும் ஒன்று.
வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை அகழியின் ஒரு பகுதி மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: T-23 புலி பிடிபட்டது