ETV Bharat / state

தீபாவளி பண்டிகை; வேலூரில் விபத்து ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 2:13 PM IST

Etv Bharatவேலூரில் விபத்து ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை

Diwali Awareness: வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி, விபத்து ஏற்படாத வகையில், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

தீபாவளி பண்டிகை

வேலூர்: நாடு முழுவதும் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தீயணைப்புத்துறை உத்தரவின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, தீ தடுப்புக் குழு சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட தீயணைப்புத் துணை இயக்குநர் அப்துல் பாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “வேலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க தீயணைப்புத் துறையினர், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

சிறுவர்கள் பட்டாசுகளை திறந்த வெளியில் பெற்றோர் முன்னிலையில் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் பட்டாசு வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காலில் செருப்பு அணிந்து, பருத்தி ஆடை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். முகத்தை நேராக வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. உயிர் விலைமதிப்பற்றது. எனவே, நாம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும், மக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் வேலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் பணியில் உள்ளனர். பட்டாசு வெடி விபத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்புத் துறை எண் 101 அல்லது 112 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவார்கள். மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என அவர் கூறினார்.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது, “தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களாகவே வேலூர் நகரம் களைகட்டியுள்ளது. ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், பட்டாசு இனிப்பு பலகாரக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட், மெயின் பஜார் என மார்க்கெட் பகுதிகள் மக்கள் நெரிசலுடன் காட்சி அளிக்கின்றன.

அதேபோல் பேருந்து நிலையங்கள், காட்பாடி ரயில் நிலையம் ஆகியவை உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதையொட்டி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பழைய, புதிய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், மாநில எல்லை சோதனைச் சாவடிகள், மாவட்ட எல்லைகளில் சீருடையிலும், சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையம், மண்டி வீதி, லாங்கு பஜார் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு உரிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படுகிறது.

மேலும், காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீசார் இணைந்து சோதனை மேற்கொள்வதுடன், தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா என்ற சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, காட்பாடி, குடியாத்தம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஜார் வீதிகள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் போலீசார் கூடுதலாக நியமனம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது” எனவும் கூறினார்.

இதையும் படிங்க: தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில்..! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.