வேலூர்: கர்நாடக மாநிலம், பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டான பகுதி ஜி.கே.குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பிசெரில்(40). இவர் தனது உறவினர்களுடன் பிருந்தாவன் விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து காட்பாடிக்கு வந்துள்ளார்.
காட்பாடி ரயில்நிலையம் வந்ததும் ரயிலிலிருந்து இறங்கிய அவர்கள், நடைமேடை 2ல் உள்ள மின்தூக்கி அருகே தாங்கள் கொண்டு வந்திருந்த பேக், பைகளுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதில் 5 பவுனில் தங்க பிரேஸ்லெட், 5.5 பவுனில் தங்கச்சங்கிலி, வளையல்கள், 3 பவுனில் தங்க நெக்லஸ், 4 பவுனில் மற்றொரு செயின், 14 கிராமில் தங்க மோதிரம், 10 கிராமில் மற்றொரு தங்க மோதிரம் என மொத்தம் 20.5 பவுன் தங்க நகைகள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.8.20 லட்சம் எனவும் தெரிவித்து அல்பிசெரி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வசந்தபுரம் வி.கே.டி.தெருவைச் சேர்ந்த சாந்தரூபன் மகன் ஜார்ஜ் என்கிற சசிக்குமார் (32) என்பவரை போலீஸார் கைது செய்ததுடன், அல்பிசெரில் குடும்பத்தினரிடம் இருந்து திருடப்பட்ட மொத்த நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு 24 மணிநேரத்துக்குள் தொடர்புடைய நபரைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: 3 வட மாநிலத்தவர்கள் கைது..!