வேலூர்: கோயம்புத்தூரில் இருந்து ஒடிசாவுக்கு 18 டன் பஞ்சு காட்டன் நூல் ஏற்றிச் சென்ற லாரி வேலூர் வேலப்பாடி பகுதியில் வளைவில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட லாரியில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் தெற்கு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி விபத்தினால் மின்கம்பம் சாய்ந்ததால், உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். விபத்தில் சேதம் அடைந்த லாரியை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. விநோதமாக மதுக்கடை முன்பே அமர்ந்து தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள்!