ETV Bharat / state

பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்பது குறித்து அதிமுக மாநாட்டில் பேசவில்லை - கி.வீரமணி விமர்சனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 8:40 PM IST

Updated : Aug 28, 2023, 9:09 PM IST

neet exam
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

தமிழ்நாட்டில் அண்ணாமலை மேற்கொள்வது போனியாகாத கடைப்பயணம் என்றும், பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவை மீட்க என்ன வழி? என்று எடப்பாடி பழனிசாமி மதுரை அதிமுக மாநாட்டில் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டிய வீரமணி, வரும் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கடுமையாக விமர்சித்த கி.வீரமணி

வேலூர்: வேலூர் மாவட்ட திராவிடர் கழக சார்பில் நடத்தும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டமானது குடியாத்தத்தில் இன்று (ஆக.28) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேடையில் பேசும்போது, “பொதுக்கூட்டம் தொடங்கியபோது மேடையில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது இல்லை இதுபோன்ற நிலைதான் பாஜகவும், ஆர்எஸ்எஸ் கட்சியும் என்றார். பெரியார் மண்ணில் இவைகள் எல்லாம் நிலைக்காது; அந்த நேரத்தில் மட்டும் தொல்லையாக இருக்கும், இதுபோன்று நாங்கள் எத்தனையோ பார்த்திருக்கோம்” என்று கூறினார்.

போனியாகாத அண்ணாமலையின் கடைப்பயணம்: பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை குறித்த கேள்விக்கு, போனியாகாத பாஜகவின் கடைப்பயணம்; பொய்க்கால் குதிரை ஆட்டமாக இருக்குமே தவிர, உண்மை குதிரையாக இருக்க முடியாது என்று சாடினார். தமிழ்நாட்டில் இருக்கிற 'திராவிட மாடல் ஆட்சி' என்பது ஒரு ரேஸ் குதிரை போன்றது. ரேஸ் குதிரைக்கும், பொய்க்கால் குதிரைக்கும் இடமில்லை எனவும், ஆளுநராக இருப்பவர் அரசியல் சட்டப் பிரமாணத்திற்கு நேர் விரோதமாகவும், மக்கள் நலனுக்கு விரோதமாகவும் நடந்து கொள்கிறார்.

சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்: மேலும், அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முடியாது எனவும், 13 கோப்புகளில் கையெழுத்திடாமல் உள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேவையில்லாமல் பல பல்கலைக்கழக பிரச்னைகளில் தலையிடுகிறார் எனவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 13 சட்ட மசோதாக்கள், சட்ட வரைவுகளை நிறைவேற்றினால்தான் ஆட்சி சக்கரம் சுழல முடியும் எனவும், ஆளுநர் பொதுவாக எது அரசாங்கத்திடம் இருந்துபோனாலும் அதை நிறுத்த என்ன செய்யலாம்? என யோசித்து கொண்டு இருப்பதாக வீரமணி குற்றம்சாட்டினார்.

மேலும், நீட் தேர்வு (NEET Exam) என்பது சட்டவிரோதமாகும். ஏனென்றால், இந்தியா முழுவதும் ஒரே தேர்வு நடத்துவது முரண்பட்ட ஒரு நிலையாகும். இதுவரை 21 பெற்றோர்கள் உட்பட பல மாணவ, மாணவிகள் தற்கொலையில் ஈடுபடும் அளவிற்கு தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இவையெல்லாம் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானத்தை இரண்டு முறை நிறைவேற்றி, சட்ட வரைவு ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இன்னும் ஆறு மாதம் அல்லது ஏழு மாதங்களில் ஆட்சி மாறும். அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்றார்.

அதிமுக மதுரையில் நடத்திய மாநாட்டை அதிமுகவை விட்டு பிரிந்தவர்களே 'புளியோதரை மாநாடு' என்று சொன்னார்கள். அது புளியோதரையா? இல்லை எலுமிச்சை சாதமா? என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு பிரச்னைகளை பற்றி அல்லது மிக முக்கியமான பிரச்னைகளை பற்றி ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் சொல்லவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க என்ன வழி?: அதோடு, தாங்கள் அடகு வைத்த கட்சியை டெல்லியில் இருக்கும் பாஜகவிடமிருந்து மீட்பதற்கு என்ன வழி? என்பதை சொல்லவில்லை. அவருடைய மௌனம் என்பது ஏதோ பங்காளி சண்டைக்கு காட்சியை காட்டினார் என்பதை தவிர வேறு எதுவும் கிடையாது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ன நிலைப்பாடு எடுத்தார்களோ? அந்த நிலைப்பாட்டிற்கு இடம் கொடுக்காத அளவிற்கு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Jan Dhan Yojana: இந்தியாவின் நிதி சேர்ப்பு கொள்கையில் மாபெரும் புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்.!

Last Updated :Aug 28, 2023, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.