ETV Bharat / state

குடும்பத் தகராறு: மனைவியைக் கொலைசெய்து நாடகமாடிய கணவர் கைது

author img

By

Published : Feb 18, 2022, 9:29 PM IST

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வேலூர்: ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் ரவி (33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சானங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சத்யா (26). இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சத்யா தனது தம்பி ஸ்ரீதரிடம் போன் செய்து தனது கணவர், குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறினார். இதனால், சத்யாவின் குடும்பத்தினர் ஓங்கப்பாடிக்கு சென்று சமாதானம் செய்துள்ளனர்.

பின்னர், நேற்று (பிப்ரவரி 17) மீண்டும் குடும்பத்தாருக்கு போன் செய்த சத்யா, என்னை நம் வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் என அழுதுள்ளார். அப்போது பேசிய ரவி, இன்னும் இரண்டு நாள் கழித்து தானே கொண்டுவந்து விடுவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 18) காலை ரவியின் உறவினர்கள் அவரின் செல்போனிலிருந்து சத்யா தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்து அக்கா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் தனது குடும்பத்துடன் ஓங்கப்பாடிக்குச் சென்று பார்த்தபோது சத்யா அறையில் இறந்துகிடந்தார்.

இது குறித்து, பெண் வீட்டார் ரவியிடம் விசாரித்தபோது சத்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். ஆனால் சத்யாவின் கழுத்தில் நகத்தின் கீறல்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில் குடும்பப் பிரச்சினை காரணமாக சத்யாவை அவரது கணவரும் குடும்பத்தாரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாகவும், அவர்களைக் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

ஆர்ப்பாட்டம் செய்த உறவினர்கள்
ஆர்ப்பாட்டம் செய்த உறவினர்கள்

அதன்பேரில், ஆய்வாளர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து ரவியைச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில் சத்யா உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளைச் சீண்டிய ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.