ETV Bharat / state

"கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல; அது நமது உரிமை" - அமைச்சர் துரைமுருகன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 8:52 PM IST

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறியது வருத்தமளிப்பதாக கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல; அது நமது உரிமை என கூறியுள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

வேலூர்: தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழா வேலூரில் உள்ள கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் இன்று (செப்.15) நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திட்டத்தை தொடங்கி வைத்து சுமார் 2000 பயனாளிகளுக்கு உரிமைத் தொகை பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல. அது உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ள உரிமை. கர்நாடக அரசு தற்போது தண்ணீர் இல்லை, அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூற இயலாது. காவிரியில் கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை தமிழ்நாட்டுக்கு பங்கிட்டு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், கர்நாடகம் கே.ஆர்.சாகர், கபினி உள்ளிட்ட மற்ற அணைக்கட்டுகளில் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் தான் நாங்கள் கேட்டோம்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், "தமிழ்நாட்டுக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 5ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றால், அது தற்போது கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்புகளை ஆராய்ந்துதான் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு தண்ணீரை தரமறுப்பது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய உத்தரவை மீறும் செயல். இந்தப் போக்கு சரியானது அல்ல. இதுதொடர்பாக கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால், அதனால் ஒன்றும் பிரச்னை ஏற்படப்போவதில்லை. வரும் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, காவிரி நதிநீர் விவகாரத்தில், இதுவரை நடந்த விவரங்களை தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர்கள் எடுத்துரைக்க உள்ளனர். அதன்பிறகு உச்ச நீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு நமக்கு சாதகமான நிலை இல்லை என்றால் தமிழ்நாடும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன செய்வது என்று முடிவெடுக்கலாம். இப்போது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்கிறது" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான சிவக்குமாரின் தொகுதியில்தான் மேகதாது அணை கட்டப்படவுள்ளது. அதனால் காவிரி விவகாரம் தொடர்பாக அவர் உணர்ச்சி வசப்படலாம், அவரும் அப்படி உணர்ச்சிவசப்படக் கூடியவர்தான்.

ஆனால், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அரசியலில் முதிர்ந்தவர் எனக்கு மிக நெருக்கமானவர். அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஆனால், அவர்கூட நிலைமைகளை புரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என பேசியிருப்பது ஆச்சரியமளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: சனாதன எதிர்ப்பு கருத்தரங்கு திடீர் ரத்து!! அரசு கலைக்கல்லூரி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.