போலி சான்றிதழ்: 4 ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம்

author img

By

Published : Sep 4, 2021, 9:04 AM IST

போலி சான்றிதழ்

போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக வேலூரில் நான்கு ஊராட்சி செயலாளர்களைப் பணிநீக்கம்செய்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) உத்தரவிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கணியம்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு என மொத்தம் ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவ்வொன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் காலியாக இருந்த ஊராட்சி செயலாளர் பணிகள் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.

அந்தவகையில் பணியில் சேர்ந்தவர்களில் ஒருசிலர் போலியாகக் கல்விச் சான்றிதழ் கொடுத்து ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்ததாக வந்த தொடர் புகாரையடுத்து, அவர்களின் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக நான்கு பேரின் கல்விச் சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது.

இதனையடுத்து போலியான கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் குறித்த விவரப் பட்டியல் அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கிராம ஊராட்சி) அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனையடுத்து காட்பாடி ஒன்றியம் ஏர்தாங்கல் ஊராட்சி செயலாளர் ராஜா, குடியாத்தம் ஒன்றியம் மோர்தானா ஊராட்சி செயலாளர் விநாயகம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பறவைகள் ஊராட்சி செயலாளர் லோகநாதன், பாலூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரையும் பணிநீக்கம் செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஊர்பியின் படு கிளாமர்: அம்மாடியோவ் விமான நிலையத்திலேயே இப்படியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.