ETV Bharat / state

3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘0’ மார்க்? - திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுமுடிவுகளில் குளறுபடி

author img

By

Published : Apr 18, 2023, 6:00 PM IST

3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘ஜீரோ’ மார்க்? - திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முற்றுகை!
3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘ஜீரோ’ மார்க்? - திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முற்றுகை!

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவு வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

வேலூர்: காட்பாடி அடுத்த சேர்காட்டில், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 79 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் முதல் பருவத்தேர்வுகள், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. இதில் சுமார் 3,200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பூஜ்ஜியம் அளவில் மதிப்பெண் வந்ததாகவும், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், இன்று (ஏப்ரல் 18) சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்பாடி மற்றும் திருவலம் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும், தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்கலைக்கழக கணினி கோடிங் சீட்டில் விதித்துள்ள விதிமுறைகளை சரியாக பேராசிரியர்கள் பின்பற்றாததாலும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும், அதனாலேயே இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இவ்வாறு நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து, மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: வேலூர் திருவள்ளுவர் பல்கலை. தேர்வு முடிவில் குழப்பம்.. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.