ETV Bharat / state

தவறான சிகிச்சையால் கன்றுக்குட்டி இறந்ததாக புகார் - மூடிய ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் போராட்டம்!

author img

By

Published : May 6, 2023, 8:01 PM IST

Vellore Youth
Vellore Youth

அரசு கால்நடை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது கன்றுக் குட்டி உயிரிழந்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Vellore Youngster Protest against Government Veterinary hospital doctor

வேலூர் : அரசு கால்நடை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது கன்றுக் குட்டி உயிரிழந்ததாக கூறி இறந்த கன்றுக் குட்டியை தூக்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயுடன் ஓல்டு டவுன் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டனின் பண்னையில் இருந்த கன்றுக் குட்டிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும், அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு காட்டிய போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இறந்த கன்றுக் குட்டியின் சடலத்துடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மணிகண்டன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியது, "நான் வளர்த்து வரும் 8 கால்நடைகளில் ஒரு பசு கடந்த 5 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது.

பிறந்தது முதலே இந்த கன்றுக் குட்டிக்கு தொப்புள் கொடி அருகே புண் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கன்றுக் குட்டியை கடந்த சனிக்கிழமை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு கன்றுக் குட்டியை பரிசோதித்த மருத்துவர் சுப்பிரமணியன், அதற்கு செலுத்துவதற்காக ஊசி மருந்தினை பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கன்றுக் குட்டிக்கு மருத்துவ உதவியாளர் ஒருவர் ஊசி மருந்தினை செலுத்தினார். தொடர்ந்து, கன்றுக் குட்டியை வீட்டிற்கு கொண்டு சென்ற ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துவிட்டது. உடனடியாக இறந்த கன்றுக் குட்டியுடன் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறினேன்.

அதற்கு ஊசி மருந்தினை பரிந்துரை செய்த கால்நடை மருத்துவரும், உதவியாளரும் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, அரசு கால்நடை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே எனது கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மணிகண்டன் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக கன்றுக் குட்டிக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் கூறுகையில், "கன்றுக் குட்டிக்கு தொப்புள் கொடி அருகே ஏற்பட்டிருந்த தொற்று காரணமாக கடுமையான காய்ச்சல் இருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கன்றுக் குட்டியின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு காய்ச்சலுக்காக ஊசி மருந்து பரிந்துரைக்கப்பட்டது.

மற்றொரு மருத்துவர் தான் கன்றுக் குட்டிக்கு ஊசி மருந்து செலுத்தினார். எனினும், கடுமையான காய்ச்சல் காரணமாக கன்றுக் குட்டி உயிரிழந்துவிட்டது. இது தொடர்பாக கன்றுக் குட்டி வளர்ப்பவருக்கு உரிய விளக்கம் அளித்தும் அதனை புரிந்து கொள்ளாமல் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுமுறை நாள் என்றும், திங்கள்கிழமை நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி கூறியதை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட மணிகண்டன் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

இதையும் படிங்க : MDMK Vaiko : மதிமுகவின் சொத்து பட்டியல் வேண்டுமா?.. வைகோ கூறிய பதில்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.