ETV Bharat / state

இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்: பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்!

author img

By

Published : Aug 27, 2021, 12:01 PM IST

Updated : Aug 27, 2021, 4:24 PM IST

climate-change
பருவநிலை மாற்றம்

பத்து வயதிலேயே பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதியுள்ள சிரிஷ், இரண்டு சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்த புரிதல் இன்றைய காலத்தில் பலருக்கு கிடையாது. நன்கு படித்தவர்களுக்கும் அதில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக கணித்திட இயலாது. ஆனால், பருவநிலை மாற்றத்தை குழந்தைகள் வரை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், விளையாட்டு தீம் வடிவில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார் 10 வயதாகும் சிரிஷ்.

சிரிஷின் பெற்றோர் வேலூர் மாவட்டம் அரியூர் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஆறுமுகம் - தேவி துளசிராமன்.

climate change
கார்பன் ப்ளாக் பஸில் புத்தகம்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுபாஷ் ஆறுமுகம், தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அவரது மகன் சிரிஷ் அங்குள்ள மரியெட்டா சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் அகாடெமிக்ஸ் (Marietta Centre for Advanced Academics) பள்ளியில் நான்காம் வகுப்பு (4th Grade) படித்துவருகிறார்.

ஆவணப்படத்தால் எழுந்த கேள்வி

சிறு வயதிலேயே சிரிஷின் திறமையைக் கண்டறிந்த அவரது ஆசிரியர் ஏஜ்ஜலா ஹெர்பல், அறிவியல் சார்ந்த விஷயங்களைப் படித்திட ஊக்குவித்தார். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்தபோதுதான், ஐந்தரை வயதில் பருவநிலை மாற்றம் குறித்த ’பிஃபோர் தி ஃப்ளட்’ (Before the flood) என்னும் ஆவணப் படத்தைப் பார்த்த சிரிஷுக்குப் பருவநிலை மாற்றம் குறித்த சிந்தனை எழுந்துள்ளது.

climate change
சாதனையில் சிரிஷ்

இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் விழாவின்போது, பருவநிலை மாற்றம் குறித்து தனது நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணிய சிரிஷ், 'நாம் முறையாக ஆற்றலை சேமிக்க வேண்டும். தேவையின்றி மின்விசிறி, மின்விளக்கு போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது, அவற்றின் தேவை இல்லாதபோது அணைத்துவைக்க வேண்டும்' எனச் சிறு உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து சிறுவன் பள்ளி, மாநில அளவிலான பருவநிலை மாறுதல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.

10 வயதில் எழுதிய புத்தகம்

பருவநிலை மாறுதல், அதன் விளைவுகளைப் பலருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிரிஷ், கார்பன் ப்ளாக் பஸில் (Carbon Block Puzzle) என்ற புத்தகத்தை தனது எட்டு வயதில் எழுதத் தொடங்கி 10 வயதில் வெற்றிகரமாக முடித்தார்.

பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்

இந்தப் புத்தகம் அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்தப் புத்தகத்தை தற்போதுவரை உலகெங்கிலும் சுமார் 150 பேர் வரை வாங்கிப் படித்துள்ளனர்.

சாதனை புத்தகத்தில் இடம்

இந்தப் புத்தகத்தினை எழுதியதற்காக ’ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனை புத்தகங்களில் இச்சிறுவன் இடம்பெற்றுள்ளார்.

இவரது ஐ.கியூ. (IQ) அளவைக் கண்டு வியந்த பள்ளி நிர்வாகமோ, சிறுவனுக்கு நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு Double Promotion வழங்கியுள்ளது. இயல்பாக ஒருவரின் ஐ.கியூ. அளவு சராசரியாக 110 இருக்கும், ஆனால் சிரிஷுக்கு 152 ஆக இருந்தது.

சிரிஷ்
நாசாவில் சிரிஷ்

புத்தகம் ஏன் விளையாட்டு வடிவில் எழுதப்பட்டுள்ளது?

இது குறித்து சிரிஷ் சுபாஷ் நம்மிடையே கூறுகையில், "இந்தப் புத்தகம் பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள், அதனை எப்படித் தடுப்பது என்பது குறித்தது. இந்தப் புத்தகத்தை டெட்ரிஸ் என்னும் விளையாட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். இவ்வாறாக புத்தகம் எழுதுவதால் பருவநிலை மாற்றம் குறித்து குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினர் வரையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

பருவநிலை மாறுதலில் இந்தியாவின் நிலை என்ன?

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினை, இந்தியாவில் இது தீவிரமாகவே உள்ளது. புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் பெரும்பாலான கடலோரப் பகுதிகள் கடல்மட்ட உயர்வால் வெகு சீக்கிரத்திலேயே நீரில் மூழ்கும் இடர் உள்ளது.

பருவநிலை மாறுதலைத் தடுக்கும் திட்டம் உள்ளதா?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாக அதீத செயல்திறனுடன் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன. கிட்டத்தட்ட 50 விழுக்காடு செயல்திறனுடன் தாவரங்கள் இதனைச் செய்து முடிக்கின்றன. இந்தச் செயல்திறன் குறைவாகத் தெரியலாம்.

ஆனால், தற்போது நாம் பயன்படுத்தும் சூரிய ஒளித்தட்டுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் தாவரங்களின் இந்தச் செயல்திறன் அதிகம். எனவே நான் இந்தத் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின் மூலமாக சூரிய ஒளியினை மின்சாரமாக மாற்றும் திட்டத்தினைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

climate change
சிரிஷ் குடும்ப புகைப்படம்

வருங்கால நோக்கம் என்ன?

வருங்காலத்தில் ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக விரும்புகிறேன். பருவநிலை மாற்றம் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிப்பேன். பருவநிலை மாற்றத்தினைத் தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்க மக்களை ஊக்குவிப்பேன்.

மேலும் காஸ்மாலஜிஸ்டாக (Cosmologist) விரும்புகிறேன். அதன் மூலம் கிராண்ட் யூனிஃபைட் தியரி (Grand Unified Theory) குறித்து ஆய்வுசெய்ய விரும்புகிறேன்" எனக் கூறினார்.

இச்சிறுவனுக்கு அனைத்து வகைகளிலும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் அவரது பெற்றோர், நிச்சயமாகப் பருவநிலை மாற்றத்திற்கென ஒரு நல்ல தீர்வை தனது மகன் கண்டுபிடித்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு அறிவியல் துறைகளிலும் தடம்பதிக்க விரும்பும் இந்தச் சிறுவனின் கனவுகள் நனவாகிட ஈடிவி பாரத்தின் வாழ்த்துகள்.

இதையும் படிங்க: பணமே இங்கு செல்லாது - சீறும் சீமான்

Last Updated :Aug 27, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.