ETV Bharat / state

விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட திருச்சி விஜய் ரசிகர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:59 PM IST

விஜயகாந்த் நலம் பெற மண் சோறு சாப்பிட்ட திருச்சி விஜய் ரசிகர்கள்
விஜயகாந்த் நலம் பெற மண் சோறு சாப்பிட்ட திருச்சி விஜய் ரசிகர்கள்

Vijay fans prayed for Vijayakanth: நடிகர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருச்சி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர், விஜயகாந்த். இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, தைராய்டு பிரச்னை ஏற்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த நவ.18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த நவம்பர் 29ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம், விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லை எனக் கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதனை அறிந்த திரைப் பிரபலங்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பங்காற்றிய பிறகு, தமிழக அரசியலுக்கு வந்து தேமுதிக என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்; சசிகலா நீக்கத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு!

கட்சி தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், இவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பூஜைகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி, விஜய் ரசிகர் ஆர்.கே.ராஜா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

அது மட்டுமின்றி, திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில், அங்குள்ள சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு விஜயகாந்த் பெயரில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: "கேப்டனுக்காக எனது உடல் உறுப்புகளை தானமாக தருகிறேன்" - முகநூல் பக்கத்தில் கூலித் தொழிலாளி கண்ணீர் பதிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.