ETV Bharat / state

Karnataka election: காங்கிரஸ் வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்: திருச்சி சிவா

author img

By

Published : May 13, 2023, 3:01 PM IST

Karnataka election
காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்!

திருச்சி: கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தீரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த அறிவிப்பின் படி, கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி, காங்கிரஸ் 81 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்களில் - பாஜக 46 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், உள்ள தொகுதிகள் பழைய மைசூரு பிராந்தியமாக கருதப்படுகிறது. இங்கு குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் பொதுவாக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும். ஆனால், இந்த முறை காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 13 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மேலும் தபால் வாக்குகள் சுற்று முடிந்து, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் இன்னும் மாற வாய்ப்புகள் உள்ளன.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வெற்றி முகம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், “கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் பெரும்பான்மை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தல் வெற்றி என்பது முன்கூட்டியே எதிர் பார்த்த ஒன்று தான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்ததால் கர்நாடகா மாநிலத்தில் மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதை கடந்த கால நிகழ்வுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் தீவிர பிரசாரங்களும், தொண்டர்களின் உழைப்புமே இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்பதை நிச்சயமாக அடித்தளத்தில் வைத்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி கொடுத்தாலும், எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை என்பதை ஒன்றியத்தில் நடைபெறும் ஆட்சியின் மூலமாகவும் வேறு மாநிலத்திலும் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

எனவே, இந்த தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு என்பது இந்திய நாட்டின் ஜனநாயகம் உயிர் துடிப்புடன் இருக்கிறது என்ற உண்மையை நிலை நிறுத்துகிறது. வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த வெற்றியை முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களாக இருந்தாலும், ஒன்றியமாக இருந்தாலும் நம்முடைய ஜனநாயகத்திற்கு கேள்விக்குறியாக்குகின்றன.

எதிர்க் கட்சிகளை ஒடுக்குகின்ற செயல்கள் நம்முடைய ஒருமைப்பாடுக்கு, மதச்சார்பின்மைக்கும் பலவிதமான அச்சத்தை உருவாக்குகின்ற நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. ஆகவே இந்த தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது இல்லாமல், இந்தி ஜனநாயகத்தின் வெற்றி எனலாம். எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி உரியதாக இருக்கிறது. இதே நிலை அடுத்த ஆண்டு நிச்சயமாக எல்லா இடங்களிலும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய அரசியல் பயணத்தை தொடரலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Ooty Rose Show: 18-வது ரோஜா கண்காட்சி... கண்களுக்கு விருந்தளித்த வண்ண ரோஜாக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.