ETV Bharat / state

தனியார் பள்ளிகள் அதிபர்கள் சங்கத்தில் பிளவு

author img

By

Published : Nov 19, 2020, 5:25 PM IST

நர்சரி
நர்சரி

திருச்சி: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி ,மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நிர்வாக நியமனங்களில் ஜனநாயக முறை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தாகவும் குற்றஞ்சாட்டி அச்சங்கத்திலிருந்து விலகி புதிய அணியை நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தற்பொழுது உதயம் ஆகியுள்ள உள்ள புதிய அணிக்கு ஒருங்கிணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தமிழகத்திலுள்ள 12 ஆயிரம் பள்ளிகளின் தாளாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சங்கத்தின் வரவு- செலவு கணக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. தன்னிச்சையாக மாநில நிர்வாகிகளை தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இது சட்ட விரோதமாகும். அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிப்பதால் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. சங்க செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் சங்கத்தில் பதவியிலிருக்கும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 90% பேர் தற்போது எங்களுடன் வெளியேறியுள்ளனர். நாங்கள் புதிதாக சங்கம் தொடங்குவதா? அல்லது ஏற்கனவே உள்ள சங்க நிர்வாகிகளை நீக்கிவிட்டு பழைய சங்கத்தை தொடர்ந்து நடத்துவதா? என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்” என்றார்.

பேட்டியின் போது சங்கத்தின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிர்மலா என்கிற சந்திரசேகரன், மதுரை நாகராஜன், ராஜா, திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் குணசேகரன், திருச்சி மாவட்ட பொருளாளர் வேணு குமார், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.