ETV Bharat / state

திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி வேஷம் அணிந்து நூதன முறையில் போராட்டம்!

author img

By

Published : Aug 15, 2023, 11:43 AM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18வது நாளாக நேற்று ஆதிவாசி உடை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

formers protest
விவசாயிகள் ஆதிவாசி வேஷம் அணிந்து போராட்டம்

விவசாயிகள் ஆதிவாசி வேஷம் அணிந்து போராட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18வது நாளான நேற்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) ஆதிவாசி உடை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளாவன:

2016ஆம் ஆண்டில் நிலவிய வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக்கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமல் போலியாக கையெழுத்தை போட்டு மத்திய காலக்கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர். அதேபோல் ஆலடியாறு அணையில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணை உடன் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

மேலும், கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் ஓய்வூதிய திட்டம், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது, என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும், 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமாக 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவ வேண்டும் என்றனர்.

மேலும், காவிரியில் மேகதாது அணை கட்டக் கூடாது என்றும் காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு கூறுகையில்,“விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடி, கரும்பு ஏற்றுமதிக்கு உரிய நியாயமான விலையை மத்திய, மாநில அரசு நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை புறக்கணித்து வருகிறது என குற்றம் சாட்டினார். மேலும், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு முடிவுகள் வெளியிட கோரி மாணவர் சங்கம் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.