ETV Bharat / state

விவசாயிகளை ஏமாற்றத்தில் மூழ்கடிக்காதீர்; மேட்டூர் அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறக்க வாசன் வலியுறுத்தல்

author img

By

Published : May 22, 2023, 7:34 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திருச்சியில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திருமணம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை முன்னிறுத்தி பேசினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கடைமடை பாசன விவசாயிகளின் ஏமாற்றத்தை தவிர்க்க, மேட்டூர் அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திருமணம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கொண்ட குழு அமைத்து அவர்கள் வாயிலாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப, தண்ணீர் திறப்பின் அளவை உயர்த்தி ஏற்பாடு செய்ய வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, அந்தத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பொதுப்பணித் துறையினரின் செயல்பாடு இருக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் திறப்பதை நிறுத்த வேண்டும். கோடையில் பெய்த மழையால் எள், உளுந்து போன்ற பயிர்கள் அழுகி வீணாகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என விவசாயிகளின் குறைகளை முன்வைத்தார்.

மேலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து பேசிய அவர், “கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சோகமான சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்த போதிலும், போதைப் பொருட்கள் வருவதை, தமிழக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை. அதன் பின்னணி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

இதில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு‌ அடக்க வேண்டும். மக்கள் உயிரை காப்பாற்றும் பணியை, அரசு செய்ய வேண்டும். இதில் அரசியல் செய்யக் கூடாது. போதைப் பொருட்கள், கள்ளச்சாராயத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம், ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். போதைப் பொருட்கள் புழக்கம் தான் சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கு காரணம்.

பொதுமக்கள் பாதிக்கப்படும் விவகாரத்தில், மெத்தனப் போக்கை கடைபிடிக்கக் கூடாது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை மறந்து, தானியங்கி இயந்திரம் போன்று புதுப்புது வடிவங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு பொய் வாக்குறுதி கொடுத்த ஒரு ஏமாற்றும் அரசாக கருதுகிறேன். எப்போதும் இல்லாத அளவுக்கு, டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுகின்றனர்.

ஆட்சியாளர்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்மறை ஓட்டுக்கள் அதிகம் பதிவாகி எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மத்தியில் ஆட்சியாளர் பணி உயர்வாக இருப்பதால், இந்தியாவில் அந்த நிலை ஏற்படவில்லை” என கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தன் கருத்தினை தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “2,000 ரூபாய் திரும்பப் பெறப்படுபவது, நேர்மையாக செயல்படுபவர்களுக்கு நல்ல செய்தி. தவறான வழியில் செயல்படுபவர்களுக்கு கெட்ட செய்தி. வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல், பதுக்கல் போன்றவற்றை தொடர்ந்து செய்பவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

சாமானிய மக்களுக்கு இதில் எந்தவித பாதிப்பும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இதை தவறாக பேசலாம். உண்மை நிலையை யோசித்து பார்த்தால், இது நல்லவர்களுக்கு பொருத்தமான அறிவிப்பு. தவறானவர்களுக்கு பொருந்தாத அறிவிப்பு. நல்லவர்கள் கூட இருக்க வேண்டுமா? தவறானவர்கள் கூட இருக்க வேண்டுமா? என்பதை எதிர்க்கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது அரசின் முடிவு இல்லை.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் முடிவு. பணப் புழக்கத்தில் சந்தேகம் ஏற்படும் போது, பதுக்கல்காரர்களுக்கு பாடம் கற்பிக்கவும் பொருளாதார பாதிப்பை தடுக்கவும் இது போன்ற அறிவிப்புகள் வெளியாவது இயல்பு. தவறான பாதையில் இருப்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையட்டும், எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டை வாங்குவதை மறுக்கக் கூடாது - கடைகளுக்கு RBI கவர்னர் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.