ETV Bharat / state

திருச்சியில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு.. பலே கும்பல் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jun 24, 2023, 12:06 PM IST

Trichy
போலி பத்திரப்பதிவு

திருச்சி மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு செய்ய வந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இறந்தவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு செய்ய வந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்

திருச்சி: நடு இருங்களூரைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் ஆரோக்கியசாமி. இவருக்கு சொந்தமாக இருங்களூர் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆரோக்கியசாமி என்பவர் 5 பேரை அழைத்துக் கொண்டு திருச்சி மாநகர் காஜா நகர் மெயின் ரோடு கருப்பையா மகன் சங்கர் என்பவருக்கு (பொது அதிகார ஆவணம்) பவர் ஏஜென்ட் மாற்ற சார் பதிவாளர் கோகிலாவை அணுகி உள்ளார்.

அப்போது ஆரோக்கியசாமியின் ஆதார் கார்டை சார் பதிவாளர் கேட்டுள்ளார். அப்போது அந்த ஆதார் கார்டில் ஏதோ தவறு உள்ளது என சந்தேகம் ஏற்பட்டதால், ஆவணங்களை சரிபார்த்து பின்னர் பவர் ஏஜென்ட் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனால் ஆரோக்கியசாமி என்பவர் உடன் வந்த 5 பேரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கோகிலா இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆரோக்கியசாமியை விசாரித்தபோது, அவர் ஆரோக்கியசாமி இல்லை என்றும், திருச்சி மாநகர் பீமா நகரைச் சேர்ந்த நாகமுத்துவின் மகன் சண்முக சுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் தினக் கூலிக்கு பெயிண்டிங் வேலை செய்பவர். போலியாக ஆதார் அட்டை தயார் செய்து பவர் ஏஜென்ட்டாக சங்கர் என்பவருக்கு மாற்றம் செய்ய வந்த தகவலை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் சண்முகசுந்தரத்தை விசாரித்தபோது, “எனக்கு செலவுக்கு பணம் தருவதாக சங்கர் என்பவர் அழைத்து வந்தார். கையெழுத்து மட்டும் போட்டால் போதும் வாருங்கள் என்று 6 பேர் சேர்ந்து மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து சொல்லும் இடத்தில் ஆரோக்கியசாமி என கையெழுத்து போட்டால் போதும் என்று தெரிவித்ததின் பேரில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தேன்" என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சண்முக சுந்தரத்துடன் யார் யார் வந்த 5 பேர் யார் என்று விசாரணை செய்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த திருச்சி மன்னார்புரம் காஜா நகரைச் சேர்ந்த சங்கர், தென்னூரைச் சேர்ந்த ராஜ்கபூர், சலீம், செல்வராஜ், நடு இருங்களூரைச் சேர்ந்த சாமிதுரை ஆகிய 5 பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்களைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நடு இருங்களூரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து உள்ளார். மேலும், 60 சென்ட் இடத்தைப் பிரிப்பதில் அவர்கள் குடும்பத்திற்குள் கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தெரிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த நில இடைத்தரகர் சாமிதுரை, அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் தென்னூரைச் சேர்ந்த செல்வராஜ், சலீம் ஆகிய 2 நில இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு நிலத்தை எப்படி அபகரிப்பது என்று திட்டம் தீட்டு உள்ளனர். அதன்படி மன்னார்புரம் காஜா நகர் சங்கர் என்பவருக்கு பவர் ஏஜென்டாக இடத்தை முதலில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் இடத்தைப் பெற்று 5 பேரும் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்றும், சிறு தொகையை சண்முக சந்தரத்திடம் கொடுத்து விடலாம் என்று எண்ணி ஆரோக்கியசாமி போன்று சண்முகசுந்தரத்தை ஆள்மாறாட்டம் செய்து பயன்படுத்த திட்டம் தீட்டி நேற்று மதியம் சண்முகசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்து ஆரோக்கியசாமி போன்று ஆதார் கார்டை போலியாக தயார் செய்து சங்கருக்கு இடத்தை பவர் ஏஜெண்ட் கொடுப்பது போன்றும், மீதமுள்ள 4 பேரும் சாட்சி கையெழுத்து போடுவதற்காகவும் வந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது.

இருங்களூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 சென்ட் புறம்போக்கு இடத்தை ஆரோக்கியசாமி அவரது பெயரில் பட்டா மாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் பவர் ஏஜென்ட் செய்ய வந்த 6 பேர் கொண்ட கும்பலை மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரூ.500 கடனுக்காக நண்பர் கொலை.. டெல்லியில் பயங்கரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.