திருச்சி: ஹரியானாவில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற சிலம்ப வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கபாடி, கிரிக்கெட், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடந்தன. நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு சார்பில், திருச்சி, சென்னை, சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிலம்ப வீரர்கள் 48 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில் திருச்சியிலிருந்து மட்டும் பயிற்சியாளர் வேல்முருகன் தலைமையில் 14 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
ஹரியானாவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு வென்றது. 10 வயது முதல் 30 வயது வரம்பில் வீரர்களுக்கு சிலம்ப போட்டி நடைபெற்றது.
ஹரியானாவில் நடந்த போட்டியில் கோப்பையை வென்ற சிலம்ப வீரர்கள் இன்று ரயில் மூலம் திருச்சி வந்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, சிலம்ப பயிற்சியாளர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த முழு விவரம் எங்களுக்கு தெரியவில்லை.
முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால், அது தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. முதலமைச்சரை சந்தித்தால் எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.
அரசு வேலைவாய்ப்பை எங்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். வேலை இல்லாமல் பல வீரர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10 நாடுகளில் ஒரு போட்டி இருந்தால் அந்த போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்று ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிக்கு சிலம்பம் தகுதி பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது கொண்டு சென்றுள்ளார்கள். விரைவில், ஒலிம்பிக்கிலும் சிலம்பம் இடம்பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்றார்.