திருச்சி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருச்சியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதேபோல் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள காஜா மியான் பள்ளியில் வாக்களித்தார்.
இதேபோல் அதிமுக வேட்பாளர்கள் கு.ப. கிருஷ்ணன், பரஞ்சோதி ஆகியோர் குழுமணியிலும், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் பொன்மலைப்பட்டி பள்ளியிலும், திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளியிலும் வாக்களித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் வாக்களித்தார். இதேபோல் திருச்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.