துறையூர் கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

author img

By

Published : Jan 22, 2023, 5:48 PM IST

துறையூர் கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி

திருச்சி அருகே உள்ள துறையூர் கனரா வங்கியில் ரூ.41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் முகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி: துறையூர் பாலக்கரை பகுதியில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் துறையூர் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர்.

அத்துடன் ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் இங்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முகேஷ் என்பவர் தங்க நகை மீது கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை மதிப்பீடு செய்து, அந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதிகாரியிடம் கொடுத்து வந்தார்.

சில வாடிக்கையாளர்களிடம் மோசடியாக 2 விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று, அதில் ஒன்றில் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தின் சரியான அளவீட்டை நிரப்பியும் மற்றொரு விண்ணப்பத்தில் அதிக எடை மற்றும் ரொக்கத்தை நிரப்பியும்; அதனை அதிகாரியிடம் கொடுத்தும் மோசடி செய்துள்ளார். மேலும் மீட்கப்பட்ட நகைக்கு பதிலாக மோசடியாக மீண்டும் அந்த நகையை அடமானம் வைத்து ரூ.41 லட்சத்து 22 ஆயிரத்தை வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது தணிக்கையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மதிப்பீட்டாளர் முகேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு மணி நேரத்தில் 8 கலைகளை செய்து மாணவர்கள் உலக சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.