ETV Bharat / state

திருச்சியில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர்: வாகன ஓட்டிகள் அவதி!

author img

By

Published : Feb 1, 2021, 4:15 PM IST

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி: மேலப்புதூர்- முதலியார் சத்திரம் இடையிலான ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் பல நாட்களாக தேங்கி இருப்பதால், வாகனங்கள் நீந்தி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குகளை தவிர்ப்பதற்காக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆளில்லாத லெவல் கிராசிங்கை ஒழிக்கும் நடவடிக்கையாக சுரங்கப் பாதைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் கட்டப்படுகின்றன.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் சாலையில் இருந்து மேலப்புதூரை அடையும் வகையில் ரயில் தண்டவாளத்துக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப் பாதையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற சுரங்கப் பாதைகளின் மையப்பகுதியில் மழைநீர் தேங்கிக் கொள்வது வழக்கமான விஷயமாகும். பெரிய அளவிலான சுரங்கப் பாதையில் இவ்வாறு தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

இதேபோன்றுதான் மேலப்புதூர்- வேர்ஹவுஸ் இடையிலான பெரிய சுரங்கப் பாதையில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறிய அளவிலான சுரங்கப் பாதையில் மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் சிறிய மழை பெய்தாலே சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் ஒரு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை மழைநீரில் நீந்தி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் மழைநீர் புகுந்து பழுது ஏற்படுகிறது. இதனால் தேங்கியிருக்கும் மழை நீரில் இறங்கி இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு மெக்கானிக் ஒர்க் ஷாப்பை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதோடு பாதசாரிகள் முற்றிலும் சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் வழக்கம்போல் சுரங்கப் பாதையின் மேல் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

இந்நிலையால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. மேலும் மழை நீர் பல நாட்களாக தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவக்கூடிய அபாயம் உருவாகிவிட்டது. ஆகையால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த சுரங்கப் பாதையில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க...விளம்பரப் பதாகை வைக்கும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.