ETV Bharat / state

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. காவிரி ஆற்றில் இறங்கியதால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:42 PM IST

farmers protest
அய்யாக்கண்ணு தலைமையில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Farmers Protest In Cauvery River: திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்காததைக் கண்டித்தும் விவசாயிகள் பலரும் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி: திருச்சியில் சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலரும் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய விலை பொருள்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் விவசாய விலை பொருள்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி உரிய விலையை வழங்க முன்வர வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 58 நாள்களாக நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நான்கு முறை காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்திற்கு முன்பாக, மாலை போட்டு ஒப்பாரி வைத்து, கருமாதி செய்தனர்.

இதனைக் கண்டித்து திருச்சியிலும் அய்யாக்கண்ணு தலைமையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கருமாதி செய்ததுடன் இரண்டாம் நாள் பால் தெளித்தனர். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் மாதம் காவிரியில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவப் படத்தை கருமாதி செய்ததை இன்று காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதி சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என காவிரி ஆற்றில் இறங்கிய விவவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீரங்கம் சரக காவல் துறை உதவி ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் காவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் திறக்கும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து, காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக காவிரி பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"மத்திய அரசுக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்" - அதிமுக மாஜி அமைச்சர் சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.