ETV Bharat / state

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்.. கண்கவர் கழுகு பார்வை காட்சிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:15 PM IST

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-November-2023/20120876_tri.mp4
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்

Maha Deepam: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட மாக தீபத்தை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்

திருச்சி: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று (நவ. 26) மாலை சரியாக 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட இந்த மகா தீபத்தைக் கண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஓம் நமச்சிவாய என்று முழக்கமிட்டவாறு சாமி தரிசனம் செய்தனர். தென்கயிலாயம் என போற்றப்படுவதும், சைவ தலங்களுள் ஈடு இணையற்றதாகவும் சிறப்பு பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளி உள்ளார்.

ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் தாய்வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த ஸ்தலம் என்பதால் இந்த தலத்தில் சிவன் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். சுமார் மூவாயிரத்து ஐநூறு பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த மலைக்கோட்டையில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் என்றழைக்கப்படும் விநாயகர் கோயிலும், மலை நடுவே தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி காட்சி அளிக்கின்றனர்.

அத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியில் இருந்து மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்கப்பட்டது.

தொடர்ந்து கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சி, தாயுமானவர் சன்னதி, பிள்ளையார் கோயில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் ஆயிரம் லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி, 300 மீ அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகா தீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க ஏற்றப்பட்டது.

இதை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டவாறு வழிபாடு செய்து வணங்கிச் சென்றனர்.

இந்த தீபத்தை மலைக்கோட்டையை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறநிலையத் துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

மகா தீபம் ஏற்றப்படும் போது சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் ஓதுவார்கள். இதில் இந்து சமய அறநிலையத் துறையினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும் இந்த மகா தீபம், 3 நாட்கள் தொடர்ந்து இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்! "அரோகரா.. அரோகரா.." என பக்தர்கள் முழக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.