ETV Bharat / state

"திமுக நடத்துவது டாஸ்மாக் மாடல் அரசு" - அண்ணாமலை கடும் சாடல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 8:18 AM IST

Enn Mann Enn Makkal yatra
என் மண் என் மக்கள் பாதயாத்திரை

En Mann En Makkal: அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையின் நான்காம் கட்ட நடைபயணம் திருச்சியில் நடைபெற்றது.

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை

திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நான்காம் கட்ட நடைபயணம் திருச்சி லால்குடியில் நடைபெற்றது.

அந்த பயணத்தை லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கி லால்குடி ரவுண்டானாவில் முடித்த பின்னர் அண்ணாமலை பேசியதாவது, "திருச்சி லால்குடி ஏழு சப்த ரிஷிகள் ஈஸ்வரனை வழிபட்ட கோயில் அமைந்த ஊர். சனாதன தர்மத்தை பேணிக்காப்பது இங்கே சரியாக பொருந்தும். 40 செங்கல் சூளைகள் லால்குடியில் உள்ளது. உழைப்பாளிகளால் உருவாக்கப்படும் செங்கல்கள்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும்.

கடந்த ஜூலை மாதத்தில் லால்குடியில் செங்கல் சூளைகளில் வேலை பார்த்த ஆறு கொத்தடிமைகளை மீட்டதாக செய்தி படித்தேன். ஆனால், இங்கே 2 அமைச்சர்களும் லால்குடியைச் சொந்த ஊர்களாகக் கொண்டவர்கள். ஒருவர் நேரு, மற்றொருவர் மகேஷ். நேரு தற்போதே தனது வேலையைத் தொடங்கி விட்டார். அவரது மகனை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு. மூன்றாம் தலைமுறையாக குடும்ப ஆட்சியில் வந்துள்ளார், அமைச்சர் மகேஷ்.

திமுக என்றாலே குடும்ப ஆட்சி, அவர்களது குடும்பம், அவர்கள் மட்டுமே 1967 முதல் இதையே செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நம் யாத்திரை ஒவ்வொரு படித்த இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை உருவாக்குவதே நோக்கம்.

மேலும், கல்லக்குடி பேரூராட்சித் தலைவராக இருந்த பால்துரை, அப்பகுதி மக்களிடம் லால்குடி டால்மியா சிமெண்ட் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி இருந்தார். பின் பணத்தை கொடுத்தவர்கள் கேட்ட பொழுது, நேரடியாக சிமெண்ட் நிறுவனத்தில் உள்ளே புகுந்து பாதுகாவலர்களை அடித்து, உள்ளே இருக்கக்கூடிய கணிப்பொறிகள் எல்லாம் உடைத்து எறிந்தவர், இந்த திமுககாரர் பால்துரை.

திமுக என்றாலே ஓசி டீ, பிரியாணி சாப்பிட்டு பில் கொடுக்காமல் செல்வது, பியூட்டி பார்லரில் தகராறு செய்வது, சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது இதை அனைத்தும் செய்வது திமுகவினர். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மாமூல் மாமூல் என்பது திமுகவில் மட்டும்தான். சென்னைக்கு வந்தால், அமைச்சர்கள் மாமூல். உள்ளூருக்கு வந்தால் உள்ளூர் திமுக பிரமுகர்கள் மாமூல்.

அமைச்சர் கீதாஜீவனிடம் முட்டை எப்படி கெட்டுப் போனது என கேட்ட பொழுது, முட்டையில் கருப்பு கலர் சீல் வைத்திருந்தோம். மழை காரணமாக முட்டையில் கருப்பு கலர் கரைந்து கலந்து முட்டை கெட்டு விட்டதாக பதில் அளிக்கிறார். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி திமுக ஆட்சி. எதை எடுத்தாலும் மாமூல் உச்சத்தில் உள்ளது. திமுக ஆட்சியில்தான் கல்லக்குடி கொண்ட கருணாநிதி என திமுகவினர் அனைவரும் கருணாநிதி அய்யாவை சொல்லுவார்கள்.

கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு உண்மையை எழுதியுள்ளார். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்கு கல்லக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அதில் மூன்று குழுக்கள் கலந்து கொண்டது. ஒரு குழுவில் கருணாநிதி கலந்து கொண்டார். மூன்றாவது குழுவில் கண்ணதாசன் கலந்து கொண்டார். 1953 ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தில் கருணாநிதி ரயில் வராத தண்டவாளத்தின் தலை வைத்து போராட்டம் நடத்தினார்.

போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து கண்ணதாசன் அப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினார். போலீசார் அவரை அடித்தும், உதைத்தும் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு, கருணாநிதிக்கு 3 மாத சிறை தண்டனையும், கண்ணதாசனுக்கு 18 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் கல்லக்குடி கண்ட கண்ணதாசன் என்று சொல்ல வேண்டும். பொய்யாக பேசி அரசியலில் வரலாற்றை மாற்றி மாற்றி பேசுவது திமுகவினர்தான். 70 ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் 125 நாட்கள் போராடிய விவசாயிகள் ஏழு பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்காக நாளை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அவர்களை விடுவிக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். அவர்கள் கேட்பது நியாயமான போராட்டம். தண்ணீர் உள்ள விவசாயப் பகுதிகளில் 3,600 ஏக்கர் விலை நிலங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்பதுதான் அவர்களுடைய போராட்டம்.

இது குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்ட பொழுது, தொழிற்சாலைகளை வானத்திலயா போய் கட்ட முடியும் என பதிலளிக்கிறார். விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை தகவல் அனைத்தும் செய்தித்தாளில் பார்த்ததாக குறிப்பிடுகிறார்.

திமுகவினர் 501 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். முதல்வர் 30 மாதத்தில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என பொய்யாக பேசி வருகிறார். 20 வாக்குறுதிகளை முழுமையாக கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வந்து விட்டனர். திமுக என்ற தீய சக்தியை இந்தத் தேர்தலில் அடித்து விரட்ட வேண்டும்.

திமுக கூறுவது திராவிட மாடல் அரசு இல்லை, அது டாஸ்மாக் மாடல் அரசு. டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் என்ற இரண்டு அமைச்சர்களின் வயிற்று பிழப்பிற்காக டாஸ்மாக் மூலம் வருவாயை பெருக்கிக் கொடுக்கிறது. உழைப்பவர்களின் காசு அரசுக்கும் சேரவில்லை. அமைச்சர்களுக்குத்தான் செல்கிறது, அவர்களின் சாராய ஆலையின் மூலமாக. மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். கள்ளுக்கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலையில் தேர்வு கட்டணம் உயர்வு - அமைச்சர் பொன்முடி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.