ETV Bharat / state

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு… ஊர் நாட்டாமை மீது வழக்கு!!

author img

By

Published : May 23, 2022, 2:48 PM IST

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மனைவி செல்லபாப்பா (வயது 60) இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகன் ரமேஷ் உடன் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகனான ஜெகதீசன் (வயது 41) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த கோமதி (வயது 33) என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேஷ், வனிஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஊர் மக்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த ஊர் கோவில் திருவிழா சமயத்தில், ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூர் முக்கியஸ்தர்கள் வசூல் செய்வதை தவிர்த்தனர்.ரமேஷ் குடும்பத்தினர் நேரில் சென்று முக்கியஸ்தர்களிடம் முறையிட்டும் வரிவசூல் செய்யப்படவில்லை. இதனையடுத்து ரமேஷ் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் டிஎஸ்பி தலைமையில் ஊர் முக்கியஸ்தர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது.

ஊர் நாட்டாமை மீது புகார்

தற்போது நடைபெற்று வரும் மாசி விழாவிற்கு ரமேஷிடமிருந்து குடிபாட்டு வரி வாங்க முக்கியஸ்தர்கள் மறுத்துவிட்டனர்.இந்த சூழலில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊர் முக்கியஸ்தர்கள் சின்னச்சாமி, மாயவன், உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ரமேஷ், 120 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் எனது தம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற ஒரே காரணத்தினால் கோவில் விழாவில் பங்கேற்க எங்களை அனுமதிக்கவில்லை.

எனவே காவல்துறை எங்களுக்கு வழிபாடு நடத்த உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றார். அவரது தாய் செல்லபாப்பா பேசுகையில், வழிபாடு நடத்த எங்களை அனுமதிக்காததால் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.குடி பாட்டு வரி செலுத்த தயாராக உள்ளோம், மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவை பெற்று தர வேண்டுமென கண்ணீர் மல்க கூறினார்.

இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய மனித உரிமை கட்சி பொதுச்செயலாளர் குபேரன் பேர் கூறுகையில்,காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஒரே வகுப்பினராக இருந்தும் ஊர் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து அக்குடும்பத்தை ஒதுக்கி வைப்பதால் அவர்களின் அடிப்படை உரிமை மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வயல்வெளியில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.பொது இடத்தில் மிரட்டல் விடுத்து இழிவாக பேசி வருகிறார்கள்.

இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் 9 பேர் மீதும் குடியியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 103, 110, 506( 2 ) 294(B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார்.இந்தியாவில் மனமொத்த இருவர் திருமண வயது நிரம்பியவராக இருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்கிறது சட்டம். எனவே சட்ட ரீதியாக இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: மேயர் தலைமையில் நடைபெறவிருந்த குறைதீர் கூட்டம் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.