ETV Bharat / state

Trichy Accident: திருச்சியில் பேருந்து - கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

author img

By

Published : Jun 25, 2023, 7:49 PM IST

Updated : Jun 25, 2023, 10:22 PM IST

Etv Bharat
Etv Bharat

திருச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விபத்து

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக எதிர்புற சாலைக்குச் சென்றது. அப்போது அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது கார் மோத முயன்றது. இதனைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் கார் மீது மோதால் இருக்க பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து காரின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையின் பக்கவாட்டில் இருந்த 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் அரசு பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. மேலும், காரில் பயணித்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து, மற்ற இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அவசர ஊரதி மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், காரில் சென்றவர்கள் ஆளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பு மகன் கோழி பண்ணை உரிமையாளர் நாகரத்தினம் (33), கு. உடையாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜயப்பன் (22), கணேசன் மகன் டீ கடை உரிமையாளர் மணிகண்டன் (25), நகை அடகு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துவந்த முத்துக்காளை மகன் முத்தமிழ்செல்வன் (40), மெக்கானிக் தொழில் செய்து வந்த பில்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தீனதயாளன் (20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித் குமார் விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் வட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்ட வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துபாயில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி!

Last Updated :Jun 25, 2023, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.