ETV Bharat / state

'மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்' - ராமதாஸின் கருத்தால் கூட்டணியில் விரிசலா?

author img

By

Published : Oct 22, 2020, 8:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்..." சாடிய ராமதாஸ் - கூட்டணியில் விரிசலா ?
"மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்..." சாடிய ராமதாஸ் - கூட்டணியில் விரிசலா ?

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டரில், "ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சொன்னதைச் செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதைக் கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஆளும் அதிமுக அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராமதாஸ் அதிமுக அரசை விமர்சித்திருப்பது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கருத்து கூற அவரவருக்கு உரிமை உள்ளது. கூட்டணியில் விரிசல் ஏதும் இல்லை" என விளக்கமளித்துள்ளார்.

ராமதாஸ் ட்விட்டர் பதிவு பற்றி கருத்து தெரிவித்த தன்னாட்சி தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஆழி செந்தில்நாதன், "தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பேரம் பேசுவதற்காக இதுபோன்ற வேலைகளில் பாமக ஈடுபடுகிறது. அதிமுக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என இத்தனை நாள்களாகத் தெரியாதா?

இது வெறும் தேர்தல் நாடகம். அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெறுவதற்காக அல்லது இருக்கும் இடங்களைத் தக்கவைப்பதற்காக இதுபோன்று பேசுகிறார். கூட்டணி பேரத்துக்காக திமுக கூட்டணியில் சேர்வதைப் போலவும் பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.