ETV Bharat / state

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 280 ஓ.இ மில்கள் ஸ்டிரைக்.. 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு!

author img

By

Published : Jul 5, 2023, 5:29 PM IST

Etv Bharat
Etv Bharat

மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் இன்று முதல் முழு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் அறிவித்துள்ளார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் செய்தியாளர்கள் சந்திப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சோமனூர், மங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (O.E.Mills) சார்பில் மங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் இன்று முதல் முழு உற்பத்தி நிறுத்தம் போராட்டம் தொடங்குவது என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் அறிவித்துள்ளார்.

கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 280 ஓ.இ மில்களில் இன்று முதல் முழு உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஒ.இ. மில்கள் திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் தினமும் ஆயிரத்து 400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓ.இ. மில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது, கலர் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்க பயன்படுகின்றன. மின் கட்டண உயர்வு, மின்சார நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் கட்டணம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

ஓ.இ மில் நூல்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை, இதன் காரணமாக கடும் நெருக்கடி சந்தித்து வருவதால் உற்பத்தியாளர்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டு வருவதாக திருப்பூர் அருகே மங்கலத்தில் நடைபெற்ற மறு சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள 280 ஒ.இ. மில்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மேலும் வெள்ளை நூல் தயாரிக்கக் கூடிய 290 மில்கள் திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தொடங்குகின்றன.

இது குறித்து ஓ.இ. மில் உற்பத்தியாளர் சங்கம் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறுகையில், “ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவு பஞ்சு மற்றும் ஆயத்த ஆடைகள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் Fabric waste களை மறுசுழற்சி செய்து 7 நம்பர் முதல் 40ம் நம்பர் நூல்கள் வரை கிரே மற்றும் 45 மேற்பட்ட கலர் நூல்களை உற்பத்தி செய்து கைத்தறி, விசைதறி மற்றும் Madeups துறைகளுக்கு நூல்களை கொடுத்து வருகிறோம்.

கடந்த பத்து மாதங்களாக பருத்தி விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருந்து 55 ஆயிரமாக குறைந்தும் கூட பருத்தி விலையில் இருந்து தொடர்ந்து 70 விழுக்காட்டுக்கு மேல் கோம்பர் வேஸ்ட் விலையையும் இதர கழிவு பஞ்சின் விலைகள் 40 விழுக்காட்டுக்கு மேல் விற்பனை செய்வதினால் நூல்களுக்கு விலை கிடைக்காமல் கிலோவுக்கு 20 ரூபாய் மேல் நஷ்டம் ஏற்படுவதினால் கடந்த ஒரு வருட காலமாக உற்பத்தியை பாதிக்கு மேல் குறைத்துள்ளோம்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தாழ்வழுத்த மின்சார இணைப்பு பெற்ற குறு சிறு நடுத்தர மில்களுக்கு டிமாண்ட் சார்ஜ் KW ஒன்றுக்கு 35 ரூபாய் என மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 920 ரூபாயாக தற்போது கிலோவாட் ஒன்றுக்கு 153 ரூபாய் என நான்கு மடங்குக்கு மேல் உயர்த்தி மாதம் ஒன்றுக்கு மில்லை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் ரூபாய் 17ஆயிரத்து 200 கட்டாயம் டிமாண்ட் செலுத்தும் நிலை உள்ளது. பசுமை புரட்சி செய்து வரும் மறுசுழற்சி துறையான ஓ.இ. மில்களுக்கு காலை 6-10 மாலை 6-10 என இந்த நேரத்தில் நூலை உற்பத்தி செய்தால் பீக் ஹவர்ஸ் சார்ஜ் என கூடுதலாக 15 விழுக்காடு மின் கட்டணம் விதித்துள்ளதால் தொழிலே செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் ஜவுளி துறைகளை ஊக்குவிக்க பல்வேறு மானியங்களை அறிவித்து வரும் வேளையில் கடந்த பத்து மாதங்களாக மூலப்பொருள் விலை ஏற்றத்தினால் ஏற்கனவே பெரும்பாலான மில்கள் 40-50 விழுக்காடு இயக்கியும், சிலர் முழு உற்பத்தியை நிறுத்தி உள்ள சமயத்தில் இயங்காத பாதியாக இயங்கும் மில்களுக்கு டிமாண்ட் சார்ஜையும், பீக் ஹவர்ஸ் சார்ஜையும் வசூலிப்பதினால் சொல்லெண்ணா துயரத்தில் உள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டிலேயே அதிக ஓ.இ மில்கள் உள்ள தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு மற்றும் கழிவு பஞ்சு உயர்வுக்கு ஏற்ப நூலுக்கு விலை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தவணை செலுத்த இயலாமல் கடும் துயரத்தில் உள்ளோம். மத்திய, மாநில துறை சார்ந்த செயவாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் முழு உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு மேற்கொண்டு உள்ளோம்.

கிரே உற்பத்தி கூடிய 280 ஓ.இ மில்கள் உடனடியாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குகிறோம். மேலும் வெள்ளை உற்பத்தி செய்யக்கூடிய 290 மில்களில் திங்கட்கிழமை முதல் போராட்டம் தொடங்கும். அரசு செவிசாய்க்கும் வரை காலவரையற்ற போராட்டமாக இந்த போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Dindigul-ல் இப்படி ஒரு திருவிழா - மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி; மாஸாக நடனமாடிய மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.