ETV Bharat / state

திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ரூ.50 கட்டணம் வசூலிப்பதாக புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 12:10 PM IST

திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 50 கட்டணம் வசூலிப்பதாக புகார்
திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 50 கட்டணம் வசூலிப்பதாக புகார்

Bank charges 50 Rs to get Magalir Urimai Thogai: திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பணத்தை வங்கி மூலம் தராமல், பணம் எடுக்கும் இண்டர்நெட் மையங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு 50 ரூபாய் பிடித்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 50 கட்டணம் வசூலிப்பதாக புகார்

திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மாதமாக இந்த மாதமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வந்த நிலையில், அதை எடுக்க வங்கி ஊழியர்கள் மறுத்ததோடு மட்டுமல்லாமல், தனியார் செல்போன் கடைகளுக்கு அனுப்பி, அங்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில், பெண்களுக்கு வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை எனவும், அந்த பணத்தைப் பெற தனியார் மையங்களுக்குச் செல்ல வங்கி ஊழியர்கள் அறிவுறுத்துவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், வங்கியில் இருந்து சாதாரணமாக 1,000 ரூபாய் பணம் எடுப்பதற்கு தனியார் மையங்கள் 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கும் நிலையில், இந்த வங்கி ஊழியர்கள் தனியார் மையங்களை 50 ரூபாய் வசூலிக்க கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், இதில் வங்கி ஊழியர்களுக்கும் பணம் செல்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.. காரணம் என்ன?

மேலும், இது குறித்து சரவணன் கூறுகையில், “கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பணம் எடுக்க பெண்களை அலைக்கழிக்கிறார்கள். பணம் தர முடியாது என்று கூறி, தனியார் மையங்களில் எடுத்துக் கொள்ளச் சொல்லி டோக்கன் வழங்குகிறார்கள்.

இதன் மூலம் தனியார் மையத்தினர் பணம் எடுத்து தருவதற்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். சாதாரணமாக 1,000 ரூபாய் பணம் எடுப்பதற்கு 20 ரூபாய் வசூலிக்கும் நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை எடுத்துத் தர இந்த மையங்கள் 50 ரூபாய் வசூலிக்கின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது, முழுமையாக பெண்களுக்கு சென்று சேர வேண்டும் என்றுதான் கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கணக்கு தொடங்கிட முதல்வர் நடவடிக்கை எடுத்தார். ஆனால், இந்த வங்கியில் தனியார் செல்போன் கடைகள், பணம் எடுக்கும் இண்டர்நெட் மையங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, 50 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த பணம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். இந்த விஷயம் குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரள போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.