காதலியை பெட்ரோலை ஊற்றி கொலை செய்த கொடூர காதலன் கைது

author img

By

Published : Jan 5, 2023, 7:42 PM IST

Etv Bharat

திருப்பூர் அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலியை பெட்ரோலை ஊற்றி கொலை செய்த கொடூர காதலன் கைது

திருப்பூர்: பல்லடம் அருகேவுள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் நேற்று மாலை (ஜன.4) இளம்பெண் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே பெண்ணின் மீது தீ வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் தவறி விழுந்து காயமடைந்தார்.

அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி செளனியா மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ வைக்கப்பட்ட பெண் வடமாநிலத்தைச் சோ்ந்த பூஜா (19) என்பதும், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள குடும்ப நண்பர் இப்ராகிம் என்பவர் வீட்டில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது.

வேலைக்குச் சென்ற இடத்தில் ராயர்பாளையம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (22) என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜன.04) மாலை பல்லடம் பனப்பாளையம் - பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ், பூஜாவை கல்லால் தாக்கியதுடன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளார். இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பூஜா இன்று (ஜன.05) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பூஜாவின் சொந்த ஊர் மும்பை என்றும்; தாய்-தந்தையை இழந்தவர் என்பதும் தெரியவந்தது. ராயர்பாளையத்திலுள்ள குடும்ப நண்பரான இப்ராகிம் வீட்டில் தங்கி, பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.