ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு; 2 தனிப்பிரிவு காவலர்கள் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 1:45 PM IST

Mentally Changed Women Rape Case
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு

Mentally Changed Women Rape Case: வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், 2 தனிப்பிரிவு காவலர்களை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனியாக இருக்கும்போது, அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதான விவசாயி ஒருவர் மற்றும் 70 வயது முதியவர் ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அப்பெண் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர், பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது குறித்து பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, குறிப்பிட்ட இரு நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி உள்ளார்.

உடனடியாக பெண்ணின் பெற்றோர், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கிடையே, இந்த தகவல் ஊர் பிரமுகர்களுக்கு தெரிந்ததைத் தொடர்ந்து, கிராமத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இது சம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசி ஒரு நல்ல தீர்வைக் காண்பதாகவும் காவல் நிலையத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சாந்தி, புகார் மனுதாரரை ஊர் பிரமுகர்களிடம் பேசி வரும்படி அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஊரில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும் எனவும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் ஒருபுறமும், ஊரில் அபராதம் விதிக்கப்பட்ட மன வேதனையில் இருந்தவர்களில் ஒருவர் அக்டோபர் 7ஆம் தேதி காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது.

பின்னர் இது தொடர்பாக, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், புகாரில் குறிப்பிட்டு இருந்த இருவரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, ஒருவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தியை, வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி, உடனடியாக மகளிர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கவும் உத்தவிட்டார்.

அதற்கு பதில் அந்த பணியிடத்தில் நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மலரை அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக வேலூர் சரக டிஐஜி நியமித்து உத்தரவிட்டுருந்தார். தற்போது காவல் நிலைய தகவல்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உரிய நேரத்தில் கொடுக்காத வாணியம்பாடி நகர தனிப்பிரிவு காவலர் திங்களன் மற்றும் அம்பலூர் தனிப்பிரிவு காவலர் ரமேஷ் ஆகியோரை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை; கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.