ETV Bharat / state

திருப்பத்தூரில் தனியார் பள்ளிப் பேருந்து மோதி 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 2:19 PM IST

கதறி அழுத பெற்றோர்
பள்ளி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் உயிரிழப்பு

School student dead in accident: திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பத்தூர்: நண்பருடன் இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவரின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் திவாகர் (14). இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் இன்று சக்தி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வாங்க, தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டை ரோடு வழியாக நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிப் பேருந்து, திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிலும் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு, புதுப்பேட்டை ரோடு வழியாக சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது நேர் எதிரே திவாகர் மற்றும் அவரது நண்பர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி உள்ளது. இதில் திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் பயணித்த திவாகரின் நண்பர், சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக தப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயலால் மேலும் 6 பேர் உயிரிழப்பு; மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப் பணி!

இந்த நிலையில், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பள்ளிப் பேருந்தை மாணவர்களுடன் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வேறு ஒரு பேருந்து அனுப்பப்பட்டு, பள்ளி மாணவர்கள் அங்கிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடனடியாக மாணவரின் உடலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திவாகர் உயிரிழந்ததை அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை கண்கலங்க செய்தது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு முக்கிய காரணம் மனிதர்கள்” - பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.