திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், அதே கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் நிதிகளில் முறைகேட்டில் ஈடுப்படுவதாகவும், குறிப்பாக நூறுநாள் வேலை திட்டத்தில் தனது குடும்பத்தினருக்கு வேலை அடையாள அட்டை கொடுத்து பணிக்கு வராமலேயே பணம் பெறுவதாகவும், மத்திய மாநில அரசுகளின் புதிய வீடுகள் கட்டும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாகவும், கிராம சபை நடத்துவதாக கூறி தன் உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்து நடத்தி மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி ஊராட்சி செயலாளரைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து வாணியம்பாடி - அரங்கல்துருகம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர், வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா!