திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளியானது பாழடைந்துள்ளதால் பள்ளியின் வகுப்பறை மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், மழை காலங்களில் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், பள்ளி வளாகம் புதர் மண்டி காணப்படுவதாலும், பள்ளிச்சுற்று சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதால் பள்ளி வளாகத்தில் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் புகுந்து விடுவதாகவும், உடனடியாக புதிய ஆரம்பப் பள்ளி கட்டடம் அமைத்து தர அலசந்தாபுரம் கிராம மக்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் பலமுறை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அலசந்தாபுரம் கிராம மக்கள் வாணியம்பாடி - ஆந்திரா சாலையில் அரசுப்பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் திம்மாம்பேட்டை காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசு பள்ளி மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது என்ன? - தமிழக அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!