திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதையடுத்து அவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதனால் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்குமாறு கூறி வாணியம்பாடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து அத்தியாவசிய பொருள்களுக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.