திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றிவருகிறார். இவர் 2009ஆம் ஆண்டு கந்திலி கும்மிடிகாம்பட்டியைச் சேர்ந்த முருகேசனின் மகள் முருகம்மாளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதுனிஷா(11), ரோகித் (8) என இரு குழந்தைகள் உள்ளன.
மண உறவைத் தாண்டிய காதல்?
முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். மேலும், முருகம்மாளுக்கு திருண பந்தத்திற்கு வெளியேயான உறவு இருப்பதாகவும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டை சொந்தம் கொண்டாட முயற்சி
இந்த நிலையில், முருகம்மாள் கடந்த மூன்று ஆண்டு காலமாக அவருடைய தந்தை வீட்டிலேயே தங்கி வாழ்ந்துவந்ததாகத் தெரிகிறது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது மாமனாரான மணியிடம், 'இந்த வீடு எனக்குச் சொந்தம். நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுங்கள்' என்று முருகம்மாள் கூறியதாகத் தெரிகிறது.
வாக்குவாதம் முற்றியதில் நடந்த கொலை
இதனால் வாக்குவாதம் முற்றியது. இந்த நிலையில், முருகம்மாள் சமையலறையில் இருக்கும்பொழுது மணி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால், நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல் துறையில் சரண்
முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் மணி சைக்கிளில் சென்று காவல் துறையிடம், தன் மருமகளைத் தான் வெட்டியதாகக் கூறி சரணடைந்துள்ளார்.
மணி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முருகம்மாளின் உடலை, உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
குடும்பப் பிரச்சினைக்காக, தன் மருமகளையே மாமனார் வெட்டிக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.