ETV Bharat / state

4 சட்டப்பேரவைத் தொகுதிக்கு 72 ஜோடி இயந்திரங்கள்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Mar 4, 2021, 4:01 AM IST

பாதுகாப்புக் கிடங்கிலிருந்த 72 ஜோடி இயந்திரங்கள்
பாதுகாப்புக் கிடங்கிலிருந்த 72 ஜோடி இயந்திரங்கள்

திருப்பத்தூரில் தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி அளிக்க தேர்தல் இயந்திரங்கள் பாதுகாப்புக் கிடங்கிலிருந்து 72 ஜோடி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் பிப்.26ஆம் தேதியன்று அறிவித்தது. இதனையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை தலைமை மாநில தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு கொடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்), வாக்காளர்கள் செலுத்திய வாக்கினை உறுதிசெய்யும் கருவி (விவிபிஏடி) ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான செயல்விளக்கம் அளிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்றவிருக்கு தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க 72 ஜோடி இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவனருள் வழங்கினார்.

திருப்பத்தூர் வேளாண் விற்பனை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 72 ஜோடி இயந்திரங்களை நான்காக பிரித்து, திருப்பத்தூர் 19, ஜோலார்பேட்டை 19, வாணியம்பாடி 18, ஆம்பூர் 16 என மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் உள்ள 1,371 வாக்குச்சாவடிகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

72 ஜோடி இயந்திரங்கள்
கூட்டுறவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை பார்வையிடும் ஆட்சியர் சிவனருள்
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் சிவனருள், “தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சியளிக்கவும் கூட்டுறவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை எடுத்து உதவி தேர்தல் அலுவலர்களிடம் வழங்கியுள்ளோம். அந்த இயந்திரங்களை நாங்கள் தேர்வு செய்யவில்லை. கணினி மூலமாக ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் கணினி எண் கொடுக்கப்பட்டு, அதற்கான வரிசை எண் நகலும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயந்திரம் குறித்த உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் கையில் கொடுக்கப்பட்ட நகலில் உள்ள எண்ணை வலைதளத்திற்குச் சென்று பரிசோதித்து பார்த்தால் இயந்திரம் எங்கிருந்து வந்தது ? எங்கு பாதுகாக்கப்பட்டது ? தற்போது எங்கு உள்ளது ? என்கிற தகவல்களை அறிந்துகொள்ளலாம். முறைகேடு எதுவும் நடக்காத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
4 சட்டப்பேரவைத் தொகுதி
உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இயந்திரங்கள்
இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உதவி தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.